சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக விஜயம் செய்யும் "ஜாக்பாட்".. ஆனந்தத்தில் மக்கள்
சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பாஜக செய்தித் தொடர்பாளரும் அந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ள நடிகை குஷ்பு வீடு வீடாக சென்று பாஜகவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
சென்னையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியானது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொகுதியாகும். 1977 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியும் இந்த தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வென்றுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு
மொத்தத்தில் இந்த தொகுதி திமுகவின் எஃகு கோட்டையாகும். 1977 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை திமுக வெற்றி பெற்று வந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுபவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக இருப்பவர் குஷ்பு. இவருக்கு வாக்களிப்பீர்களா என பாஜக நிர்வாகி சிடி ரவி ஒரு கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதோடு உதயநிதியை எதிர்த்து தான் போட்டியிட தயார் என அவ்வப்போது குஷ்பு, தலைமைக்கு மறைமுக தூதுவிடுத்தபடியே உள்ளார்.
கட்சித் தலைமை
இதனால் குஷ்பு இந்த தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. இதுகுறித்து கேட்ட போது இந்த தொகுதியில் நான் போட்டியிடுவேனா என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருகிறார்.
வாக்கு சேகரிப்பு
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் இந்த தொகுதி மட்டும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், உதயநிதியையும் குஷ்புவையும் நேரில் காண ஆவலாக உள்ளார்கள். இந்த நிலையில் குஷ்பு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.