"அன்பே சிவம்".. வேறென்னத்த சொல்ல.. குஷ்பு போட்ட டிவீட்!
சென்னை: நடிகை குஷ்பு இப்போதெல்லாம் என்ன கருத்து சொன்னாலும் அது சர்ச்சையாகிறது. அவர் கட்சி மாறப் போகிறார் என்று ஒரு கோஷ்டி கிளம்பி வந்து விடுகிறது.
ஆனாலும் இந்த மாதிரியான சர்ச்சைகளுக்கெல்லாம் அவர் சற்றும் சலிப்படவைதில்லை. மாறாக தனது தரப்பு விளக்கத்தைக் கொடுத்து விட்டு போய்க் கொண்டே இருக்கிறார்.
இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட செய்தி வந்ததும் பல்வேறு தலைவர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டி டிவீட்டுகளைப் போட்டு வந்தனர். அந்த வரிசையில் நடிகை குஷ்புவும் அமித் ஷா குணமடைந்து திரும்ப வேண்டி பிரார்த்திப்பதாக டிவீட் போட்டிருந்தார்.
இதையும் சர்ச்சையாக்கி விட்டனர். அமித் ஷாவை குணமடைய வேண்டிய முதல் ஆளாக நீங்கள் டிவீட் போட வேண்டிய அவசியம் என்ன என்று ஆரம்பித்த துவேஷத்துடன் ஏகப்பட்ட டிவீட்டுகள். குஷ்புவை விமர்சித்து ஒரு பக்கமும், இந்த விமர்சனம் தேவையில்லாதது என்று கூறி சிலரும், இந்த நேரத்திலுமா இப்படி விமர்சிப்பீர்கள் என்று கண்டித்து பலரும் என டிவிட்டரே அதகளமாகி விட்டது வழக்கம் போல.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் .. குஷ்பு ட்வீட்
இதேபோல தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி பிரார்த்திப்பதாக கருத்து தெரிவித்திருந்தார் குஷ்பு. இதையெல்லாம் கூட்டி வைத்து பாஜகவில் சேரப் போகிறீர்களா, பாஜகவுக்கு ஆதரவாக திரும்பி விட்டீர்களா, அதிமுகவுக்கு வரப் போகிறீர்களா என்று சரமாரியாக கேள்விகள் குவிந்து விட்டன. இதைப் பார்த்து அயர்ந்து போய் விட்டார் குஷ்பு.
இந்த நிலையில் தற்போது இன்னொரு டிவீட் போட்டுள்ளார் குஷ்பு. அதில் அன்பே சிவம்.. வேறென்ன சொல்வது.. அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார் குஷ்பு. இதற்கும் பதில்கள் வந்து குவிந்து கொண்டுள்ளன.