சர்ச்சை ஆடியோ விவகாரம்.. முதுகில் குத்திய தயாரிப்பாளர்.. நடிகை குஷ்பு வேதனை
சென்னை: நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்களோ அவர்கள்தான் உங்களை முதுகில் குத்த முயற்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நடிகை குஷ்ப வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு, சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறார். அவர் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க செயலாளராகவும் உள்ளார்.
இவர் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் திட்டி விமர்சிப்பதாக ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், "பிரஸ்காரர்களுக்கு கோவிட் தவிர வேறு எந்தவொரு செய்தியுமே கிடையாது. நம்மைப் பற்றி ஏதாவது போடுவதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் ப்ளீஸ் பத்திரம்" என்று கூறியுள்ளதுடன் ஒருமையில் பேசுவதாக ஆடியோ உள்ளது.
இந்த ஆடியோவுக்கு வருத்தம் தெரிவித்து குஷ்பு, நான் ஊடகங்களைப் பற்றிப் பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ் சுற்றி வருகிறது. அது எடிட் செய்யப்பட்டது. அது எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து சென்றிருக்கிறது. எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். என்று கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை ஆடியோ.. மன்னிப்பு கேட்டார் நடிகை குஷ்பு
அத்துடன் துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்களோ அவர்கள்தான் உங்களை முதுகில் குத்த முயற்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். எந்தத் தயாரிப்பாளர் இதைச் செய்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால், யாரென்று நான் சொல்ல மாட்டேன். எனது அமைதியும், மன்னிப்புமே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. நான் அதைத் தொடர்வேன் என்று தெரிவித்துள்ளார்.