எங்களுக்குக் கட்டளையிட எல். முருகன் யாரு.. ஜெயக்குமார் பொளேர் கேள்வி!
கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என பாஜக தலைவர் எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமை தாங்கும் என்று அந்த கட்சியின் துணைத்தலைவர் போகிற போக்கில் சொல்லி விட்டு போக அன்றில் இருந்தே அதிமுக பாஜக இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் 60 இடங்களுக்கு மேல் போட்டியிட வேண்டும் என்று பாஜகவிற்கு ஆசை இருக்கிறது. எங்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் எம்எல்ஏக்களாக இருப்பார்கள் என்று கூறி வருகிறார் மாநில பாஜக தலைவர் எல்.முருகன். தனித்து போட்டியிட்டாலும் 60 இடங்களில் வெல்வோம் என்று கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-ம் இடத்தை நோக்கி இந்தியா- பிரேசிலை நெருங்கியது
எல்.முருகன் குற்றச்சாட்டு
அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கிறது என்று எல். முருகன் அடிக்கடி கூறி வருகிறார். அதே நேரத்தில் அமைச்சர்கள் சிலர்தான் கூட்டணியில் குழப்பம் செய்கிறார்கள் என்பது பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேசிய செயலாளர் எச். ராஜாவின் குற்றச்சாட்டு.
எங்களுக்கு கட்டளையிட முடியாது
இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டணி பற்றி பேசக்கூடாது எல்.முருகன் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என பாஜக தலைவர் எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது என்று தெரிவித்தார்.
தர்மத்தை கடைபிடிக்கிறோம்
கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என்று கூறினார்.
எந்த அழுத்தமும் கிடையாது
அரசின் நிர்வாக காரணங்களால்தான் ராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
பாஜகவின் அழுத்தம் காரணமாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதாக கூறுவது தவறு. எந்த அழுத்தமும் தங்களை நிர்பந்திக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
Recommended Video
எல்லோரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது
நடிகர் விஜயை எம்.ஜி.ஆராக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல புரட்சி தலைவி ஜெயலலிதா போல எல்லோரும் மாறி விட முடியாது. மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மனாகிவிட முடியாது. செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாதேசிங்கு ஆகிவிட முடியாது என பதிலளித்தார்.