சட்டமன்றத் தேர்தல்... அதிமுக கூட்டணியில் பாஜக தொடரும்... எல்.முருகன் திட்டவட்டம்
சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக தொடரும் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் தேர்தலில் பாஜகவிலிருந்து சட்டமன்றத்திற்கு உறுப்பினர்கள் செல்வது நிச்சயம் என அவர் உறுதிப்படக் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
மும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்!
கந்த சஷ்டி கவசம்
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் வேல் பூஜைக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் வேல் பூஜை நடத்தி கந்த சஷ்டி கவசம் படித்தார். முருகப் பக்தர்களின் ஒற்றுமை உணர்வை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாக அவர் கூறினார்.
பாஜக எம்.எல்.ஏ.க்கள்
அதைத்தொடர்ந்து பேசிய எல்.முருகன், தமிழக சட்டமன்றத்திற்குள் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இந்த முறை செல்வது உறுதி என்றும், அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் தெரிவித்தார். கேரளாவில் கூட பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ள நிலையில் தமிழகத்தில் ஒருவர் கூட இல்லாதது அக்கட்சிக்கு நீண்ட நாள் குறையாக இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றிக்காட்டுவேன் என்பதில் எல்.முருகன் உறுதியாக இருக்கிறார்.
கூட்டணி தொடரும்
இதேபோல் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே பாஜக அதிமுக ஒரே கூட்டணியில் தான் உள்ளது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி தொடருவதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டார். இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக பார்க்கப்படுகிறது.
அதிமுக மவுனம்
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூட்டணி தொடர்பாக கருத்து கூறியுள்ள நிலையில் அதிமுக தரப்பில் இருந்து இதுவரை அது தொடர்பாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. கூட்டணி விவகாரத்தில் தர்மசங்கடமான நிலையில் உள்ள அதிமுக, இன்னும் அது பற்றி வாய் திறக்கவில்லை. இது குறித்த அறிய அதிமுக சீனியர் நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டபோது, தலைமை முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் நான் பேச எதுவுமில்லை என தெரிவித்துவிட்டார்.