நான் திரும்ப திரும்பச் சொல்கிறேன்.. நம்ப மாட்டீர்களா.. நாங்கள் மத்தியஸ்தம் செய்யவில்லை -எல்.முருகன்
சென்னை: அதிமுக-அமமுக இடையே பாஜக மத்தியஸ்தம் செய்யவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் மசோதா பற்றி முழுமையாக அறியாமல் ஸ்டாலின் அது குறித்து குறை கூறி வருவதாக சாடினார்.
மேலும், வரும் தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் செல்வார்கள் என்பதன் பொருள் படி தான் சட்டமன்றத்தில் காவிக்கொடி பறக்கும் என தாம் கூறியதாக விளக்கம் அளித்தார்.
அதை விடுங்க.. அதிமுக - சசிகலா இணைவதால் யாருக்கு லாபம்.. யாருக்கெல்லாம் நஷ்டம்?
தொண்டைக்கட்டு
கடந்த ஒரு வார காலமாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். தண்ணீர் மாற்றி அருந்தியதன் விளைவாக தொண்டைக்கட்டுடன் குரல் கம்மிய நிலையில் அவர் பேசினார். கூட்டணி குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக-பாஜக இடையே எந்த பிரச்சனையும் இல்லை என தாம் பலமுறை கூறிய பிறகும் அது பற்றி மீண்டும் மீண்டும் கேட்கத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.
அரசியல் இல்லை
இதனிடையே ஆளுநருடனான சந்திப்பு பற்றிய கேள்விக்கு, மரியாதை நிமித்தமாகவே ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தாம் சந்தித்து பேசியதாகவும் அதில் எந்த அரசியலும் இல்லை எனவும் எல்.முருகன் தெரிவித்தார். அரசு குறித்தோ, சசிகலா விடுதலை பற்றியோ ஆளுநரிடம் தாம் எதுவும் பேசவில்லை என விளக்கம் அளித்தார்.
சசிகலா வருகை
சசிகலா வருகை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதற்கு இப்போதே தன்னால் பதில் கூற முடியாது எனக் கூறிய எல்.முருகன், வரட்டும் பார்க்கலாம் எனத் தெரிவித்தார். அதிமுக-அமமுக இடையே பாஜக மத்தியஸ்தம் செய்வதாக கூறப்படுவது பொய் என்றும் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றும் முருகன் கூறியிருக்கிறார். டிடிவி தினகரன் டெல்லி பயணத்தை தொடர்ந்து அதிமுக அமமுக இடையே பாஜக பஞ்சாயத்து பேசி வருவதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு முருகன் மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றத்தில் காவிக்கொடி பறக்கும் என ஏற்கனவே முருகன் கூறியிருந்த நிலையில் அதற்கான விளக்கம் என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், வரும் தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் செல்வார்கள் என்ற அர்த்தத்தில் சட்டமன்றத்தில் காவிக்கொடி பறக்கும் என கூறியதாக விளக்கம் அளித்தார்.