பசுபிக் கடலில் லா நினோ காலநிலை - வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கும்
வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: இந்தியாவில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 25ம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது லா நினோ காலநிலையால் மேலும் தாமதமாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இரண்டு பருவமழையும் சரியாக பெய்து அணைகளில் நீர் நிரம்பினால் விவசாயம் செழிக்கும் விலைவாசி உயர்வது கட்டுப்படும்.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் சரியாக தொடங்கியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் சரியான அளவில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. செப்டம்பர் இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிந்து அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தாமதமாகும் பருவமழை
வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. அத்துடன் இந்திய பசிபிக் கடல் பகுதியில் நிலவ கூடிய லா நினா வெப்பநிலை காரணமாக தென்மேற்கு திசையில் தொடர்ந்து காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பருவமழை தாமதம்
வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை வருகிற 25ம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தாமதமாக உருவாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மழை பெறும் மாவட்டங்கள்
வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மட்டுமல்லாது காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களும் அதிக அளவில் மழை பெய்யும். கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மீட்பு பணிகள் தயார் நிலையில்
ஆண்டுதோறும் முன்கூட்டியே வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழகத்தில் தயாராகி விடுவார்கள். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று சுகாதாரத் துறையினருக்கு பொது சுகாதார துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். வருவாய்த் துறையுடன் இணைந்து மீட்பு பணியை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .