சென்னையில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி இல்லை.. ஆட்டுக்கறிதான்.. உறுதி செய்தது ஆய்வு முடிவு
Recommended Video
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன 2000 கிலோ இறைச்சி நாய் கறி கிடையாது, அது ஆட்டு இறைச்சி என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், கடந்த 17ம் தேதி ஜோத்பூரிலிருந்து வந்த ரயிலில் இருந்து 21 பெட்டிகளில் கெட்டுப்போன மாமிசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரயில் பாதுகாப்பு படை போலீஸ் உதவியோடு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து, அவற்றை மாநகராட்சி குப்பை கூடத்திற்கு கொண்டு சென்று அழித்தனர்.
'நாய்க்கறி' தகவல் பின்னணியில் பெரும் சதித்திட்டம்.. எஸ்.டி.பி.ஐ கட்சி சந்தேகம்
இறைச்சி வடிவம்
இந்த இறைச்சியின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது, நாய்க்கறியாக இருக்குமா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்தது. வால் பகுதி நீளமாக இருந்தது, கழுத்து பகுதி ஒடுங்கியிருந்தது போன்றவை இந்த சந்தேகங்களுக்கு காரணம்.
கால்நடை மருத்துவமனை
இதையடுத்து, வேப்பேரி கால்நடை மருத்துவமனை கல்லூரியிலுள்ள, பரிசோதனை கூடத்திற்கு, இறைச்சி மாதிரிகள் அனுப்பபட்டன. தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டவை, நாய் இறைச்சி கிடையாது, ஆட்டு இறைச்சிதான் என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
ஆடு அல்லது செம்மறியாடு
ரேடியோலஜி உள்ளிட்ட சோதனைகள் மூலமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆடு அல்லது செம்மறியாடு இனத்தை சேர்ந்த இறைச்சிதான் இது. நாய் இறைச்சி இல்லை என்று உறுதியாக தெரிவிக்கிறது ஆய்வு முடிவு.
கெட்டுப்போனது உறுதி
ஆனால், 21 பெட்டிகளில் வந்த இறைச்சி அனைத்துமே கெட்டுப்போனது என்பது உறுதியாகியுள்ளது. எனவே அவற்றை அழித்ததில் தவறு இல்லை என்பதால் ரயில்வே அதிகாரிகளும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் சர்ச்சையில் இருந்து தப்பி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இனியாவது
ஆனால், நாய்க்கறி என அவசரப்பட்டு அவர்கள் எடுத்த முடிவு காரணமாக, மக்கள் மத்தியில் இத்தனை நாட்களாக நாய்க்கறி பீதி நிலவியது. சென்னையில், சிறு, குறு ஹோட்டல்களின் பிசினஸ் படுத்துவிட்டது. இனியாவது உரிய ஆதாரங்கள் இல்லாமல் வதந்தி பரப்ப கூடாது என்பதே மக்கள் கோரிக்கை.