வேலைக்குப் பஞ்சமே இல்லைங்க.. ஆனால் தொழில் தெரிந்தவர்களைத்தான் காணோம்.. தவிக்கும் தமிழகம்
சென்னை: ஒருபக்கம் கோடிக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காவும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகாரி வேலைக்காகவும் அலைமோதிக்கொண்டு இருக்கிறார்கள். அதேநேரம் தொழில் தெரிந்தவர்கள் பற்றாக்குறையால் தமிழகம் தவித்து வருகிறது.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அரசு வேலையில் சேர்வது ஒன்றே மிகப்பெரிய லட்சம் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வேலை இல்லாவிட்டால், சாப்ட்வேர் நிறுவனங்கள் அல்லது காப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துள்ளார்கள்.
அவங்க பிரதமர்.. நான்தான் உ.பி முதல்வர்.. வெளிப்படையாக அறிவித்த அகிலேஷ்.. இதுதான் திட்டம்!
கேம்பஸ் இண்டர்வியூ
பன்னாட்டு நிறுவனங்களில் மிகப்பெரிய ஊதியத்துடன் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்டாகி வேலையில் சேர வேண்டும் என்பதே பொறியியல், கலை அறிவியல் படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்கள் பெரும்பாலானவர்களின் கனவாக உள்ளது.அதேநேரம் மிகப்பெரிய வேலை கிடைக்காதவர்கள் கிடைக்கும் வேலையில், கிடைக்கும் சம்பளத்திற்கு பணியாற்றி வருகிறார்கள்.
தொழில் கற்றால் வேலை
உண்மையில் இப்போது சொல்ல வரும் விஷயம் மாணவர்களை பற்றியதோ, படிப்பை பற்றியதோ, அல்ல. படித்து முடித்தவர்கள், ஏதேனும் ஒரு தொழிலை கற்று அந்த தொழிலில் அறிவினை மேம்படுத்தினால் வளரமுடியும் என்பதே உண்மை.சென்னையிலும், திருப்பூரிலும், கோவையிலும் பல இடங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை இருக்கிறது. அங்கெல்லாம் தொழில் தெரிந்தவர்கள் கிடைக்காமல் தொழில நடத்தும் பலர் தவித்து வருகிறார்கள்.
சமையல் மாஸ்டர்கள்
தினமும் ரூ.1000 சம்பளம் கொடுத்தாலும், உணவு தொழிலில் நல்ல சமையல் மாஸ்டர்கள் கிடைப்பதில்லை என பல ஓட்டல் நிறுவனத்தினர் புலம்புவதை பார்க்க முடிகிறது. இதேபோல் தறி மில் நடத்துபவர்கள் தறி ஓட்ட மாதம் 15 ஆயிரம் கொடுத்தாலும் ஆள் கிடைப்பதில்லை என்று சொல்வதையும் பார்க்க முடிகிறது. கட்டிட நிறுவனங்கள் கட்டிடம் கட்ட கொத்தனார்கள் கிடைப்பதில்லை என்றும், வெல்டர்கள், எலெக்ட்ரீசியன்கள், தட்சர்கள் கிடைப்பதில்லை என்றும் கூறுவதை பார்க்க முடிகிறது.
கொத்தனார் வேலை
இதேபோல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது பார்க்கும் நிறுவனங்களில் வேலை தெரிந்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. திருப்பூரில் சிங்கர் டெய்லர், கட்டிங் மாஸ்டர், அயர்னிங் மாஸ்டர் என பல தொழில்களுக்கு ஆட்கள் தேவை இருக்கிறது. வேலை தெரிந்தவர்கள் இல்லாததால் பல நிறுவனங்களில் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திருப்பூரில் நிறுவனங்களை நடத்துபவர்கள் தவிக்கிறார்கள்.
மென்பொருள் வேலை
மேலே சொன்னவை எல்லாம் உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் என்றால், மென்பொருள் சார்ந்த வேலைக்கும் சரியான ஆட்கள் பல இடங்களுக்கு கிடைப்பதில்லை. நன்றாக போட்டோ ஷாப் தெரிந்தவர்கள், டிடிபி டிசைனிங் தெரிந்தவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் டைப்பிங் தெரிந்தவர்கள், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழி பெயர்ப்பு திறன் உள்ளவர்கள், வெப் டிசைனிங் தெரிந்தவர்கள், பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. எனவே படித்த கையோடு ஏதேனும் ஒரு துறையிலோ அல்லது தொழிலோ திறமையை வளர்த்தால் தமிழகத்தில் நிச்சயம் சாதிக்க முடியும். அதற்கு பொறுமையும் விடா முயற்சியுமே அவசியம்.