100 நாள் வேலை திட்டத்திலாவது வேலை கொடுங்க... லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பம்
சென்னை: 100 நாள் வேலை திட்டத்திலாவது வேலை கொடுக்குமாறு நாடு முழுவதும் லட்சகணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கால் வேலையிழந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
படிப்புக்கு ஏற்ற வேலை என்ற பழங்கதையை மூட்டை கட்டி வைத்துவிட்டு கிடைக்கும் வேலையை செய்துகொள்வோம் என்ற மனநிலைக்கு பட்டதாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மாலத்தீவில் இருந்து 508 தமிழர்கள் உட்பட 700 பேருடன் தூத்துக்குடி வந்தடைந்தது ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல்
காங்கிரஸ் ஆட்சி
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான், '' 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்''. ஊரகப்பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய கூலித் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சியின் பெயர் சொல்லும் திட்டங்களில் ஒன்று. இதனை கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி நிதி ஒதுக்கி வருகிறது.
வேலை கொடுங்கள்
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் அடியோடு ஆட்டம் கண்டது. அதன் எதிரொலியாக பல்வேறு துறைகளிலும் வேலையிழப்பு பெருகியது. இந்தச்சூழலில் ஊரடங்கால் வேலையிழந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் 100 நாள் வேலை திட்டத்திலாவது வேலை கொடுக்குமாறு விண்ணப்பித்துள்ளனர். பி.எஸ்.ஸி, எம்.எஸ்.ஸி. பி.காம், எம்.பி.ஏ. உள்ளிட்ட பட்டப்படிப்பு படித்தோர் இதில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
வேறு வழியில்லை
தற்போதைய சூழலில் புதிதாக ஒருவருக்கு பணி கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளதால், குடும்பத்தை காக்க வேறுவழியின்றி 100 நாள் வேலை திட்டத்தில் இணைய பட்டதாரிகள் முன் வந்துள்ளனர். இதனிடையே இதனை கவனத்தில் கொண்டுள்ள மாநில அரசுகள் இது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகின்றன. 100 நாள் வேலை திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள் வரையறை பற்றியும் விவாதிக்கப்படுகின்றன.
ரூ.256 சம்பளம்
மேலும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்படி குடும்பத்தில் ஒருவருக்கு தான் வேலை தரப்படுகிறது. இதற்காக பிரத்யேக அடையாள அட்டையும் தரப்படுகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் இந்த திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு நிதியுடன் மாநில அரசும் தன் பங்கீட்டை செலுத்தி நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.256 ஊதியம் அளிக்கப்படுகிறது.