திருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்
சென்னை: இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருப்பூரில் சிக்கித்தவித்த பீகாரிகளுக்கு உதவி செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை விடுத்திருந்தார்.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்த பீகாரை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவு கிடைக்காமல் தவித்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசும், திமுகவினரும் செய்துகொடுக்க வேண்டும் என்றும் தேஜஸ்வி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திருப்பூர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளை தொடர்பு கொண்ட உதயநிதி ஸ்டாலின், பீகாரை சேர்ந்தவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்பேரில் அடுத்த 15 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை திமுக இளைஞரணி நிர்வாகிகள் வாங்கிகொடுத்தனர். இதற்கு உதயநிதிக்கு நன்றி தெரிவித்த பீகார் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தனது நன்றியை தெரிவிக்கும்படி உதயநிதியிடம் கூறியுள்ளார்.
கொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
இதனிடையே தமிழக அரசு தரப்புக்கும் இது தொடர்பாக பீகார் எதிர்க்கட்சி தலைவரும், லாலு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உரிய அதிகாரிகள் கவனத்துக்கு சென்றுவிட்டது அவர்கள் தேவையான உதவிகளை செய்வார்கள், நன்றி என்பதோடு முடித்துக்கொண்டார். ஆனால் புயல் வேகத்தில் தேஜஸ்வி கோரிக்கை விடுத்த ஒரே இரவில் உதயநிதி உணவில்லாமல் தவித்த பீகாரை சேர்ந்தவர்களுக்கு பொருளுதவி செய்துள்ளார்.