தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு
Recommended Video
சென்னை: கோவையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கைக்கு நடுவே, அண்டை மாநிலமான கேரளாவின், திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூர் அடுத்த, மாதவனா பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் ரஹீம், பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (எல்.ஈ.டி) உடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஷ்கர் தீவிரவாதிகள் குழு இலங்கை வழியாக தென்னிந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களை இலக்குகாக கொண்டு தாக்குதல் நடத்த 6 முதல் 8 பேர் ஊடுருவியுள்ளதாக கூறப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாக இருப்பதால் தமிழகம் எளிய இலக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் உளவுத்துறை எச்சரித்திருந்தது.
கோயம்புத்தூர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர்கள் இந்த தகவலை நேற்று உறுதி செய்திருந்தனர். இதையடுத்து கோவையில் ஹை அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு சோதனைகளை அதிகரித்தனர்.
இந்த நிலையில், அப்துல் காதர் ரஹீம் என்பவர் கைது முக்கியத்துவம் பெறுகிறது. பஹ்ரைனில் வணிகம் செய்பவர் ரஹீம். இரு நாட்களுக்கு முன்பு கேரளா திரும்பினார். இவருக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை தேடி வந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ரஹீம் சரணடைய திட்டமிட்டிருந்தார். வக்கீலுடன் அவர் கோர்ட்டுக்குள் நுழைய முற்பட்டபோது வெளியே வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருடன் கைது செய்யப்பட்டுள்ள ஒரு பெண் சுல்தான்பத்தேரி பகுதியை சேர்ந்தவர். சர்வதேச செக்ஸ் ராக்கெட்டில் தொடர்புள்ளவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கோவையில் தீவிரவாதிகளுக்கு உடந்தை என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.