மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் ரூ.1000! கால அவகாசம் நீட்டிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றிய அமைக்கப்பட்டது.
இது தொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.
உதவித் தொகை
இந்தத் திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு
இது தொடர்பாக அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி இருந்தது. அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை மாணவியரிடம் இருந்து பெற வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.
கால அவகாசம் நீட்டிப்பு
மாணவிகள் தங்கள் பள்ளி, கல்லூரிகள் மூலமோ அல்லது நேரடியாகவே இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 30) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், வரும் ஜூலை 10ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி
மாணவிகள் தங்கள் பள்ளி அல்லது கல்லூரிகள் மூலம் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது www.penkalvi.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி உதவித் தொகை திட்டம் தொடர்பான தகவல்களைக் கட்டணமில்லா 14417 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.