10 ரூபாய் டாக்டர் கோபாலனுக்கு இறுதி சடங்குகளை செய்யும் வண்ணாரப்பேட்டை மக்கள்.. கலங்கிய வடசென்னை!
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் ரூ 10-க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கோபாலன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மனைவி இழந்த நிலையில் தனியாக வசித்து வந்த கோபாலனுக்கு வடசென்னை மக்களே இறுதிச் சடங்குகளை நடத்துகிறார்கள்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ 10-க்கு வைத்தியம் பார்த்து வந்தவர் டாக்டர் கோபாலன் (76). மன்னார்குடியை சேர்ந்த கோபாலன் 1966 ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்தார்.
பின்னர் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்எஸ் பயின்றார். இதன் பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார். அதைத் தொடர்ந்து 2002-இல் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
கிளீனிக்
1969 -ஆம் ஆண்டு முதல் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு கிளீனிக்கை கோபாலன் தொடங்கி ரூ 2 க்கு மருத்துவம் பார்த்து வந்தார். 1976 ஆம் ஆண்டு முதல் ரூ 2-லிருந்து தனது கட்டணத்தை ரூ 5 ஆக உயர்த்தினார். சில்லறை தட்டுப்பாட்டால் நோயாளிகளே ரூ 10 கொடுத்து மருத்துவம் பெற்றனர்.
வைத்தியம்
அதிலிருந்து அவர் 10 ரூபாய் டாக்டர் என வடசென்னை மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில் கோபாலன் தொடர்ந்து வைத்தியம் பார்த்து வந்தார்.
மறைந்தார் கோபாலன்
விலைவாசி உயர்ந்த நிலையிலும் ரூ 10-க்கு அவர் வைத்தியம் பார்த்து வந்தார். மனைவியை இழந்த இவர் பிள்ளைகள் யாரும் இல்லாததால் தனியாகவே வசித்து வந்தார். அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 76.
சோகத்தில் மக்கள்
இவரது மறைவால் வடசென்னை மக்கள் சோகத்தில் கதறி அழுத வண்ணம் இருக்கிறார்கள். கோபாலனுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் வண்ணாரப்பேட்டை மக்களே இறுதிச் சடங்குகளை செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதுகுறித்து மக்கள் கூறுகையில் காக்கி உடை அணிந்து கொண்டு ஆட்டோ டிரைவர்கள் வந்தால் அந்த ரூ 10- ஐ கூட வாங்க மாட்டார்.
நூற்றுக்கணக்கில் செலவு செய்வது எப்படி?
தேவையில்லாமல் மருந்துகளை எழுதாமல் தேவையானதை மட்டுமே பரிந்துரை செய்வார். மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளியை கூட அவரது எளிமையான மருத்துவத்தால் அபாய கட்டத்திலிருந்து மீட்டுவிடுவார். அவர் இறந்தது எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய இழப்பு. எந்த நோய் வந்தாலும் ரூ 10 இருந்தால் போதும் டாக்டரிடம் சென்றுவிடலாம் என்றிருந்தோம். இனி நூற்றுக்கணக்கில் நாங்கள் எப்படி செலவு செய்வோம் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.