சாமானியர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய கருணாநிதியின் அற்புத திட்டங்கள்
சென்னை: உழவர் சந்தை, 69 சதவீத இடஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சம பங்கு, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஒரு ரூபாய்க்கு அரிசி, கலைஞர் டிவி, சமத்துவப்புரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சமானியர்களுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்தது ஏராளம். அவரது
நினைவு நாளான இன்று அத்தகைய திட்டங்கள் சிலவற்றை இப்போது நினைவுகூர்ந்து பார்ப்போம்.
இன்றைய திருவாரூர் மாவடடத்தின் திருக்குவளையில் மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர் தான் மு.கருணாநிதி . சிறுவயதில் வறுமையை மட்டும் பார்த்து வளர்ந்த அவர் பின்னாளில் முதல்வரான பின்னர் ஏழை எளிய மக்களுக்கு முடிந்தவரை பல நல்ல விஷயங்களை செய்தார்.
1967ம் ஆண்டு திமுக தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சியை பிடித்தது. பேரறிஞர் அண்ணா அப்போது முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பின்னர் 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அண்ணா மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். 1969 முதல் 1971 வரையிலும் முதல்வராக பொறுப்பு வகித்தார். அதற்கு பின் நடந்த தேர்தலில் வென்று 1971 முதல் 1976 வரை இரண்டாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தார்.
காஞ்சியில் பரபரப்பு.. அத்தி வரதர் தரிசனத்தின்போது மின்சாரம் பாய்ந்தது.. 20 பேர் காயம்
குடிசைகளை ஒழித்து மாடிவீடு
அப்போது மனிதர்களை மனிதனே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷாக்கள் ஒழித்ததோடு அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கினார்.
குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பு தொடங்கி பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன.
இலவச மின்சாரம் திட்டம்
1987ம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்த பின்னர் 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழக முதல்வரா கருணாநிதி மூன்றாவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது அவர் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பாசன வசதிக்காக மின்மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். இதேபோல் 1989ல் நடை முறைக்கு வந்தது. 1989ல் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தார்.
இடஒதுக்கீடு சட்டம்
இதேபோல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகள் பெற்று உயர்வதற்காக தமிழகத்தில் இடஒதுக்கீட்டு அளவை 69 சதவீதமாக உயர்த்தினார் அதாவது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 30%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என 69% இடஒதுக்கீடு கருணாநிதி முதல்வராக இருந்த 1989 முதல் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது.
பெண்களுக்கு அரசு பணியில் 30%
சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு ஆகியவற்றையும் முதல்வராக இருந்த கருணாநிதிதான் கொண்டுவந்தார்.
விவசாயிகளுக்காக
தமிழக முதல்வராக 1996ம் ஆண்டில் நான்காம் முறையாகப் பொறுப்பேற்ற கருணாநிதி 2001ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். அப்போது அவர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளை அவர்களே சந்தையில் விற்று நேரடியாகப் பலன் பெறும் வகையில் உழவர் சந்தைகளை தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் திறந்து வைத்தார். இந்த திட்டத்தால் விவசாயிகள் இன்றும் காய்கறிகளை சந்தையில் விற்று வருகிறார்கள். இத்திட்டத்தை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன.
மினி பஸ் திட்டம்
அனைத்து சாதியினரும் சாதி மத பேதங்களை மறந்து இணைந்து குடியிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவபுர குடியிருப்புகளை கட்டி அப்போது திறந்து வைத்தார். மேலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. குக்கிராம மக்கள் எளிதில் சுற்றியுள்ள நகரப் பகுதிகளை அடைவதற்கு வசதியாக தனியார் மூலம் சிற்றுந்துகள்/மினி பஸ்கள் இயக்கும் திட்டமும் அப்போது தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் முதல்முறை
இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில்தான் இப்படி முதல் முறையாக இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பல கிராமப்புற ஏழை மாணவர்கள் இதனால் கல்வி பயின்று இன்று நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளனர்.
2ரூபாய்க்கு அரிசி
2006 ம் ஆண்டு ஐந்தாவது முறையாக முதல்வாக பதவியேற்ற போது அவர் செய்த திட்டங்கள் தான் இன்றும் பேசுப்பொருளாக இருக்கிறது. வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவச கலர்டிவி தரப்படும் என்றார். அதன்பிறகு தான் தமிழகத்தின் அனைத்து வீடுகளிலும் கலைஞர் டிவி சென்றது. இதேபோல் 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி போன்றவற்றையும் செய்தார்.