நடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு!
சென்னை: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஜொலித்து வரும் நடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாம்.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியவுடன் அதில் 3-வது பெண் உறுப்பினராக சேர்ந்தவர் லதா. அன்றும் சரி, இன்றும் சரி எம்.ஜி.ஆர். லதா என்ற அடைமொழியோடு அழைத்தால் தான் இவரை பலபேருக்கு தெரியும் நிலை உள்ளது.
எம்.ஜி.ஆரே அரசியலுக்கு அழைத்தும், லதா அப்போது அதில் ஆர்வம் காட்டவில்லை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வந்த லதாவை, நடிகை ராதிகா தனது சித்தி நாடகத்தில் வற்புறுத்தி நடிக்க வைத்தார். பின்னர் தமிழகத்தில் மீண்டும் செட்டிலான லதா, அதிமுகவில் தனது உறுப்பினர் அட்டையையை புதுப்பித்துக்கொண்டு அவ்வப்போது கட்சிக் கூட்டங்களுக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் தன்னை மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்காதது பற்றி ஓ.பி.எஸ்.சிடம் லதா தனது வருத்தத்தை பதிவு செய்தார். மேலும், தனக்கு கட்சியில் பொறுப்பு வழங்கினால் இன்னும் தீவிரமாக செயல்படுவது பற்றியும் தெரிவித்தார்.
இவரின் கோரிக்கையை ஏற்ற ஓ.பி.எஸ். இது தொடர்பாக இ.பி.எஸ்.சுடன் ஆலோசித்துள்ளார். அவரும் நோ அப்ஜெக்ஷன் சொல்லிவிட்டார். இதனால் லதாவுக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் என்ன விசேஷம் என்றால் முன்பு இந்த கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவியை நாஞ்சில் சம்பத் வகித்து வந்தார். அதன் பிறகு யாரும் அப்பதவியில் அமர்த்தப்படவில்லை. எனவே நாஞ்சில் சம்பத் விட்டுச் சென்ற பணிகளை லதா தொடரவுள்ளார்.