ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த சலவைத் தொழிலாளர்கள்... வாட்டத்தை போக்குமா தமிழக அரசு..?
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
தெருக்களில் இஸ்திரி வண்டியை நிறுத்துவதற்கு கூட காவல்துறையினர் அனுமதி மறுப்பதால் உணவுக்கே திண்டாடும் பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் தாங்களும் உறுப்பினர்களாக உள்ளதால் நிவாரணம் தர வேண்டும் என சலவைத் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
கறை நீக்கி
தமிழகம் முழுவதும் வண்ணார் எனப்படும் சமுதாயத்தை சேர்ந்த 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராரின் உடுப்புகளில் உள்ள கறைகளை நீக்கும் இவர்கள் வாழ்வில் கரையேறினார்களா என்றால் அது இன்றும் கேள்விக்குறி தான். சென்னையில் சேத்துப்பட்டு, அடையாறு, வண்ணாரபேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் டோபிகானா எனப்படும் வண்ணான் துறைகள் இயங்கி வருகின்றன. அங்கு முழுக்க முழுக்க வண்ணார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.
வாழ்வாதாரம்
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக சலவைத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவாய் இழந்து வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். இவர்கள் நிலை இப்படி என்றால், வெறுமனே இஸ்திரி மட்டும் போட்டு கொடுக்கும் தொழிலாளர்களின் நிலையோ அதைவிட பரிதாபமாக இருக்கிறது. ஊரடங்கு காரணமாக எந்த தெருவிலும் இஸ்திரி வண்டியை(தள்ளுவண்டி) நிறுத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி தருவதில்லை. இதனால் அன்றாடம் துணிகளை தேய்த்து கொடுத்து வருமானம் ஈட்டி வந்தவர்கள் வாட்டத்தில் இருந்து வருகின்றனர்.
அனுமதி
தங்கள் நிலையை அரசு சீர்தூக்கி பார்த்து தெருக்களில் இஸ்திரி வண்டிகளை நிறுத்த குறிப்பிட்ட கால நேரத்திற்காவது அனுமதி தர வேண்டும் என சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இன்னும் 15 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் அதுவரை இதே நிலை நீடித்தால் உணவுக்கு கையேந்தி நிற்கக்கூடிய அவல நிலை வந்துவிடும் என அஞ்சுகிறார் சேத்துப்பட்டு டோபிகானாவை சேர்ந்த முருகன். இதனிடையே சென்னையில் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, என மற்ற மாவட்டங்களிலும் இஸ்திரி தொழிலாளர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.
நிவாரணம்
அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உள்ள கட்டடத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ரூ.2,000 நிவாரணம் தரப்படும் என கூறிய நிலையில், தங்களை மட்டும் ஏன் அரசு பாராமுகமாய் நடத்துகிறது என கேள்வி எழுப்புகிறார் சேத்துப்பட்டு டோபிகானாவை சேர்ந்த இந்திரா. மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் தாங்களும் உறுப்பினர்களாக உள்ளதால் தங்களுக்கும் நிவாரண உதவித் தொகை தர வேண்டும் என சலவைத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.