சட்டம் ஒழுங்கு மிக சிறப்பு...ஆபரேசன் கஞ்சா அரஸ்ட்...குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் - சைலேந்திரபாபு
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில் அளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். கஞ்சா வேட்டையில் கைதான 20,000 பேர் மீண்டும் குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு பேணிகாக்கப்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. அதிமுக ஆட்சியில் இரும்புக்கரம் கொண்டு எடுத்த நடவடிக்கை காரணமாகக் குற்றங்கள் வெகுவாகக் குறைந்தன என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
சென்னையில் 20 நாளில் 18 கொலை.. பத்திரிக்கை கருத்தை முடக்குவதில்தான் முதல்வர் கவனம் உள்ளது: எடப்பாடி
எடப்பாடி பழனிச்சாமி
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து கொலை, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகின்றன. அரசின் இயலாமையை அறிந்த தமிழக ஆளுநர் தமிழக போலீஸ் டி.ஜி.பியை அழைத்து அறிவுரை வழங்கியதற்குப் பின்னரே சுமார் 12 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
ஆளுநரிடம் மனு கொடுத்த அதிமுக
அதிமுக சட்ட ஆலோசனைக் குழுவினர் சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக ஆதாரங்களோடு ஒரு மனுவை வழங்கினார். அந்த மனுவில், தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்குவந்த 200 நாள்களில் 557 கொலைகள் நடந்துள்ளன. மேலும் பல்வேறு குற்றங்கள் குறித்த விவரங்களைப் பட்டியலிட்டு ஆளுநரிடம் மனுவாக வழங்கினர். சட்டசபையிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் பேச்சு
இதனையடுத்து நடைபெற்ற காவல்துறை மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் நான் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டேன். சட்டம்- ஒழுங்கு சரியாக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் என்று எதையும் இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
கொலைநகரம் என குற்றச்சாட்டு
தமிழகத்தில் கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாகவும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன, இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
டிஜிபி சைலேந்திரபாபு பதில்
இந்த நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பதில் அளித்துள்ளார். கஞ்சா வேட்டையில் கைதான 20,000 பேர் மீண்டும் குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.