பேசத் தேவையில்லை.. கோர்ட் தீர்ப்பை மதித்தால் போதும்.. கர்நாடகாவுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் கடிதம்
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை தேவையில்லை, நீதிமன்ற தீர்ப்பை மதித்தால் மட்டும் போதும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கடிதம் எழுதி உள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரி உள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில், பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்க வேண்டும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதிலளித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மேகதாது அணை பணிகளை கைவிட வேண்டும். மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிப்பை கைவிட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமில்லை. என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மேலும், மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.