தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வரைவு.. ஜனாதிபதியிடம் ஒப்புதல்.. ஆளுநர் உரையில் உறுதி
சென்னை: நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய சட்ட முன் வடிவு இயற்றப்படும் என்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை தொடர்ந்து சட்டசபை கூட்டப்பட்டது. முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்கள் அப்போது பதவி பிரமாணம் ஏற்றனர்.
இதனைத் தொடர்ந்து சட்டசபையின் புதிய சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு. பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
வாக்களிக்காதவர்களுக்கும் இந்த அரசு நல்லது செய்யும்.. சட்டசபையில் ஆளுநர் உரை
திராவிட போர்வாள் கருணாநிதி
இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியதாவது: திராவிட போர்வாள் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மறைந்து 3 வருடங்களாகியுள்ள நிலையில் இந்த கூட்டம் கூடியுள்ளது. அவரது கொள்கைகள், இந்த அரசை வழிநடத்தும். நமது ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
பிரதமர்-ஸ்டாலின் சந்திப்பு
மாநிலத்தின் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை இந்த அரசு பின்பற்றும். தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான பல்வேறு உதவிகளுக்காக மனு வழங்கியுள்ளார்.
வெள்ளை அறிக்கை
தமிழ்நாட்டின் நிதி நிலையில் தற்போதைய நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கையை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில நிதி நிலையில் விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக்குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசு மத்தியரசுக்கு கோரிக்கை விடுக்கும்.
நீட் தேர்வு
சமூகநிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை இந்த அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை பெற்று தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி அத்தகைய சட்டங்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
திருநங்கைகள்
திருநங்கைகளின் வாழ்க்கையும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும். பெரியார் காண விரும்பிய சுயமரியாதை சமூகமாகவும் உரிமை பெற்ற மக்களாகவும் எல்லா வளமும் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதி ஏற்று உள்ளது. இவ்வாறு ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.