இளையராஜா- பிரசாத் ஸ்டுடியோ இட விவகாரம்.. சமரச தீர்வு மையத்துக்கு போகிறது.. ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கு இடையிலான பிரச்சினை குறித்து இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ளது பிரசாத் ஸ்டூடியோ... இளையராஜா கம்போஸிங், ரெகார்டிங் எல்லாமே இங்கேதான் செய்வார்.. 42 வருஷங்களாக அவருக்கு இப்படித்தான் பழக்கம்.. இதுதான் அவருக்கு சென்டிமென்ட் இடமும்கூட.. அன்னக்கிளி முதல் இங்குதான் அவர் இசையமைத்து வருகிறார்.
காலையில் 7 மணிக்கு பிரசாத்துக்கு வந்துவிடுவார் இளையராஜா.. ராத்திரி எப்போது வீட்டுக்கு போவார் என்றே யாருக்கும் தெரியாது.. தன் குடும்பத்தைவிட அதிக நேரம் இளையராஜா இருப்பது இங்குதான்.. அவரை யாராவது பார்க்க வேண்டும் என்றால்கூட பிரசாத்துக்குபோய் தான் பார்ப்பார்கள்!
ஒப்பந்தம்
நன்றாக இருந்த இந்த நிலை, 7 மாதத்துக்கு முன்பு பிரச்சனையாக வெடிக்க தொடங்கியது. "ஸ்டூடியோவுக்கு மாத வாடகையாக ஒரு தொகையை தந்தால் நல்லா இருக்கும்" என்று பிரசாத் தரப்பு கேட்க, அதற்கும் இளையராஜா சம்மதித்ததாகவும் சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கைழுத்தாகும்போதுதான், திடீரென "அந்த இடத்தை நாங்க யாருக்கும் தருவதாகஇல்லை.. காலி செய்துடுங்க" என்று இளையராஜா தரப்பிடம் சொன்னதாகவும் செய்திகள் வந்தன.
இளையராஜா
இதற்கு பிறகுதான் இந்த விஷயம் சீரியஸ் ஆனது.. இப்படி திடுதிப்பென்று காலிபண்ண சொன்னா எப்படி? இத்தனை வருஷம் இங்கதானே இருக்கோம்.. வாடகையும் தரோம்னு சொல்லிட்டோமே என்று இளையராஜாவே நேரடியாக கேட்டும், அந்த இடத்தை ஸ்டுடியோக்காரர்கள் தரவில்லை. மேலும் இளையராஜா பயன்படுத்தி வந்த கட்டிடமும் மூடப்பட்டது. இதனால், ஸ்டுடியோ நிர்வாகத்திடம் இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சீமான் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ரெக்கார்டிங்
இந்நிலையில், இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதால், ஸ்டுடியோ நிர்வாகம், தான் பயன்படுத்தி வந்த கட்டிடத்தை இடிக்க தடை கோரியும், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை தான் அந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க கோரியும் இளையராஜா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். மேலும் இந்த 42 வருஷத்தில் 6ஆயிரம் பாடல்களை பிரசாத் ஸ்டுடியோவில்தான் ரெக்கார்டிங் செய்ததாகவும் இளையராஜா தன் மனுவில் கூறியிருந்தார்.
சமரச தீர்வு மையம்
இந்த வழக்கு நிலுவையிலேயே இவ்வளவு நாள் இருந்த நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.. அதனால், வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி இளையராஜா மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நல்ல தீர்வு
உண்மையிலேயே இளையராஜாவுக்கு அனுமதி வழங்க மறுக்க காரணம் தெரியவில்லை.. இந்த ஸ்டுடியோவை அரசியல்வாதி ஒருவர் விலைக்கு வாங்கியதாகவும், அதனால்தான் ஸ்டுடியோவை காலி செய்ய சொல்வதாகவும் சொல்கிறார்கள்.. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.. இருந்தாலும், இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் சேர்க்க மறுத்த விவகாரத்துக்கு விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.