வட மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு வளர கருணாநிதியே காரணம்.. தலைவர்கள் புகழஞ்சலி
சென்னை: "தமிழகம் முன்னேறிய மாநிலமாக வளரக் காரணம், கருணாநிதி.." என்று, அவரது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர் தலைவர்கள்.
சென்னை உயர்நீதிமன்ற, வழக்கறிஞர் ரவீந்திரன், இன்று, ஏற்பாடு செய்திருந்த, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோகான்பரன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.
வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிகழ்ச்சியில், பங்கேற்ற, முன்னாள் நீதிபதி, ராஜ இளங்கோ கூறுகையில், தலைவர்களை சந்திக்க குறிப்பிட்ட காலக்கெடுதான் தருவார்கள். ஆனால் கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். காலை 5.30 மணிக்கு நடை பயணம் தொடங்குவது முதல் இரவு 11 மணிக்கு தூங்கச் செல்லும் வரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க அனுமதி தரக்கூடிய தலைவர் கருணாநிதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி பேசுகையில், இந்தியாவிலேயே, முதல்முறையாக, கூட்டுறவு வங்கிகள் மூலம், விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி செய்தது கருணாநிதிதான். வட இந்திய மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள்தான் காரணம்.
ஆணுக்கு நிகராக, பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை நிறைவேற்றினார் கருணாநிதி. இதன்மூலம் பெரியாரின் கனவை நிறைவேற்றினார். சாலைகள், பாலங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் அதிகம் அமைக்கப்பட்டன. 45 சிறு அணைகள் கட்டப்பட்டன. கல்லூரி படிப்பு வரை இலவசக் கல்வி, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று எண்ணற்ற திட்டங்களை தமிழகத்திற்கு அவர்தான் கொண்டுவந்தார். எனவேதான், தமிழகம் முன்னேறிய மாநிலமாக உயர்ந்துள்ளது.
காமராஜர் ஆட்சிக்கு பின் தமிழகம் வளர்ந்தது கருணாநிதி ஆட்சி காலத்தில்தான்.. நாராயணசாமி உருக்கம்
புதுவை அமைச்சர், நசீம் பேசுகையில், கூறியதாவது: கருணாநிதி பற்றி பேசும்போதெல்லாம் ஒரு ஏக்கம் உருவாகுகிறது. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என்ற வார்த்தை கருணாநிதிக்கு மட்டும்தான் பொருத்தமானது. அவருக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் புதிய படைப்புகளை உருவாக்கி உள்ளார். இப்போது உயிரோடு இருந்திருந்தால், கொரோனா ஊரடங்கு காலத்தில் கிடைத்துள்ள இந்த ஓய்வை பயன்படுத்திக்கொண்டு அவர் பல நூல்களை எழுதி இருப்பாரே என்ற ஏக்கம் எழுகிறது.
எந்த அமைச்சருக்கு எந்தத் துறையை கொடுக்க வேண்டும் என்ற ஞானம் கருணாநிதிக்கு உண்டு. நான் காரைக்காலை சேர்ந்தவர் என்பதால் நீர்ப்பாசன துறையை எனக்கு ஒதுக்குமாறு புதுச்சேரி முதல்வராக ஜானகிராமன் இருந்தபோது பரிந்துரை செய்தவர் கருணாநிதி. கடைமடை பகுதியை சேர்ந்த ஒருவருக்குத்தான் நீர்ப்பாசனத்தோடு உணர்வுபூர்வமான பிணைப்பு இருக்கும் என்று அதற்கு காரணம் கூறியவர் கருணாநிதி. ஜானகிராமன் பஸ் நிறுவனம் நடத்தியவர். எனவே அவர் போக்குவரத்து துறையை வைத்திருக்க கூடாது என்று பிரித்து எனக்கு தருமாறு கருணாநிதி கூறினார். சொந்த நலனை முன்னிறுத்தி விடக் கூடாது என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தார் அவர். இவ்வாறு நசீம் தனது உரையில் தெரிவித்தார்.