இவங்க பாட்டுக்கு பேசிட்டு போயிட்டாங்க.. நம்ம மைன்ட் வாய்ஸ் சும்மா இருக்க மாட்டேங்குதே பாஸு!
சென்னை: சில நேரங்களில் தலைவர்கள் பேசுவது செம காமெடியா இருக்கும்.. சிலருடைய பேச்சுக்கள் ராவடியா இருக்கும்.
ஒரு காலத்தில் தலைவர்கள் பேசுவதைக் கேட்க தவலை தவலையாக தண்ணீரை எடுத்து குளித்து விட்டு ஓடினார்கள் மக்கள். ஆனால் இப்போதோ வீதி வீதியாக அதே தவலைகளுடன் ஓடிக் கொண்டுள்ளனர்.. குடிநீருக்காக.. அம்புட்டு கஷ்டம்ணே.
சரி அதை விடுங்க.. சில தலைவர்கள் பேச்சுக்களைப் பார்த்தபோது நம்ம மைன்ட் வாய்ஸ் சும்மா இருக்காமல் ஹே ஹேவென கூவியது.. அதிலிருந்து கொஞ்சத்தை மட்டும் கோர்த்துக் கொடுத்திருக்கோம் ... சின்சியரா படிச்சுட்டு சீரியஸா சிரிச்சுட்டு கிளம்பிருங்க.. ஜஸ்ட் ஃபார் ஃபன்...!
15 நாள் கதறக் கதற
காங்கிரஸுடன் எங்கள் கட்சி இணைந்து நடத்திய ஆட்சியில், ஒரு முதல்வரென்றும் பாராமல் அவர்களுக்கு அடிமையாகப் பணியாற்றினேன். இனி வரும் காலங்களில் காங்கிரஸுடன், ம.ஜ.த. கூட்டணி தொடருமா என்பது குறித்து பரிசீலிக்கப்படும்: கர்நாடகா மாஜி முதல்வர் குமாரசாமி. (பத்துப் பதினைஞ்சு நாள் உங்களை கதற கதற வெச்சு, அமெரிக்காவுக்கு டூர் போனப்ப நாலு எடத்த நிம்மதியா சுத்திப் பார்க்க கூட விடாம பதறி ஓடி வர வெச்சு, ராத்தூக்கம் கூட இல்லாம ரகளை பண்ணின்னு இம்பூட்டு அடியை அந்த காங்கிரஸால வாங்கி கட்டிய பிறகும் அந்த கட்சி மேலே உங்களுக்கு இருக்கிற லவ்வு போகலையா குரு?)
தெரியுதே ஜி
காஷ்மீர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன். ஆனாலும் இந்த விவகாரத்தில் அரசியல் சாசன வழிமுறைகளை பின்பற்றி இருந்தால், நன்றாக இருந்திருக்கும். அவ்வாறு செய்திருந்தால் கேள்வியே எழுந்திருக்காது. இருப்பினும் நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன்: ஜோதிர் ஆதித்ய சிந்தியா. (நாட்டு நலனுக்காக ஆதரிக்கிறேன், ஆதரிக்கிறேன்னு மீண்டும் மீண்டும் சொல்றத பார்க்கிறப்பவும், அப்படி பண்ணியிருந்தால் எவனும் கேள்வியே கேட்டிருக்க முடியாதுன்னு ஐடியா கொடுக்கிறதை பார்க்கிறப்பவும்....உங்க நலனுக்காக ஏதோ பிளான் பண்ணுற மாதிரி தெரியுதேஜி!?)
ராம கோபாலன்
காஷ்மீர் விஷயத்தில் மோடி அரசின் நடவடிக்கையை காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதிலிருந்து தெரியவில்லையா இவர்கள் வெறுப்பு அரசியல் செய்வது: இந்து முன்னணி ராம கோபாலன். (தல, நீங்க என்னதான் பி.ஜே.பி.க்கு ஆதரவா கூவுனாலும் அவிய்ங்க உங்களை எலெக்ஷனை தவிர மற்ற காலங்கள்ள கண்டுக்குறதே இல்ல. இத கூட ஒருவித ஒதுக்கு, வெறுப்பு, சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்னு சொல்லலாமில்லையா?)
எப்படி உருப்படுவது
மாநில அரசின் உரிமையை மத்தியரசிடம் கேட்டுப் பெற எடப்பாடி அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும் வரையில் மாநில மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கப்போவதில்லை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன். (டியர் காம்ரேட், உங்க கட்சி ஆட்சி புரிந்த மாநில மக்களும் இதே மாதிரி ‘இவங்க இருந்தா உருப்படவே விடமாட்டாய்ங்க'ன்னு திங் பண்ணித்தான் கையை கழுவிட்டாங்களோ? மிச்சமிருக்கிற கேரளத்தையாவது காப்பாத்துவீங்களா?)
- ஜி.தாமிரா