அச்சமில்லை அச்சமில்லை... பாரதியிடம் இளைஞர்கள் துணிச்சலை கற்றுக்கொள்ளுங்கள் - மோடி
இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்று பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, இன்றைய இளைஞர்கள் பாரதியாரைப் பார்த்து துணிச்சலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சென்னை: பாரதியாரிடம் இருந்து இன்றைய இளைஞர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று பாரதியாரின் கவிதை வரிகளையும் பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசினார். பாரதியார் பிறந்தநாளான இன்று வானவில் பண்பாட்டு மையம் சார்பில் காணொளி வாயிலாக நடைபெற்ற பாரதியார் சர்வதேச விழாவில் பங்கேற்று உரையாற்றிய மோடி இதனை தெரிவித்தார்.
முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. வானவில் பண்பாட்டு மையம் சார்பில் காணொளி வாயிலாக நடைபெற்ற சர்வதேச பாரதியார் விழாவில் வானவில் பண்பாட்டு மைய இயக்குநர்,பாரதியார் குறித்து ஆய்வு செய்து வரும் சீனிவாசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி தலைமையில் காணொளி வழியாக நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். சுதந்திர போராட்ட வீரர்களின் பேரரசனாக பன்முகத் தன்மை கொண்டவர் பாரதியார் என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டினார். தேசிய ஒருமைப்பாடு, சமூக சீர்திருத்தம், பெண் விடுதலைக்கு முக்கியத்துவம் அளித்தார் பாரதியார். கவிதைகள், கட்டுரைகள் மூலம் பாமர மக்களுக்கும் விடுதலை தாகத்தை ஊட்டியவர் பாரதியார் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி வணக்கம் என்று தமிழில் தனது உரையை துவக்கினார். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய மோடி, சுதந்திர போராட்டத்தில் துணிச்சலாக செயல்பட்டவர் பாரதியார் என்று தெரிவித்தார்.
வாரணாசிக்கும் பாரதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். வாழ்ந்த 39 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்தவர் பாரதியார் என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
"இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அளித்திடுவோம்" என்றும் பாரதியின் பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டி பேசினார் பிரதமர் மோடி. பாரதியாரின் பிறந்தநாளை கொண்டாடும் இந்த தருணத்தில் அவரது கவிதைகளை இன்றைய தலைமுறையினர் நினைவு கொள்ள வேண்டும் என்று கூறினார்.
பிரதமர் மோடி பங்கேற்ற இந்த சர்வதேச பாரதி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார் நல்லி குப்புசாமி. அழைப்புக்கு நன்றி கூறியிருந்தார் ரஜினிகாந்த். இன்றைய தினம் நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.