மழை, நிவாரணப் பணிகள்.. சென்னை, காஞ்சி, நாகை, புதுவையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
சென்னை: தொடர் மழை மற்றும் நிவாரணப் பணிகள் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டனம், மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை, கஜா புயல் கரையைக் கடந்தது. இதன் காரணமாக நாகை மாவட்டம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. சேதத்திலிருந்து மீண்டும் இன்னும் முழுமையாக மின்சார இணைப்பு கூட கிடைக்கவில்லை . மக்கள் இன்னும் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு, நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாகை, வேதாரண்யம், திருக்குவளை கீழ்வேளூர் ஆகிய தாலுகாக்கள் இதில் அடங்கும்.
இதேபோல புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை அறிவித்திருந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடுவே சரியான தகவல் தொடர்பு இல்லையா என்ற கேள்வியை, அமைச்சர் மற்றும் கலெக்டர் அறிவிப்புகள் எழுப்புகின்றன.
சென்னைக்கும் விடுமுறை:
இதற்கிடையே சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அருகாமை மாவட்டமான காஞ்சிபுரத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று இரவிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாளை வரை இது தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.