திமுக கொடுக்கிற தொகுதிகளே போதும்...வழக்கம் போல செலவை பார்த்துக்குவாங்க...ஆறுதல் மூடில் இடதுசாரிகள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக கூட்டணியில் எத்தனை சீட்டுகள் கொடுக்கப்பட்டாலும் ஏற்றுக் கொண்டு களப்பணியாற்றுவோம் என்கிற முடிவில் உள்ளனவாம் இடதுசாரி கட்சிகள்.
நாட்டின் பல மாநிலங்களில் இடதுசாரிகளின் கோட்டைகள் தகர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படியான இக்கட்டான தருணத்தில் கடந்த லோக்சபா தேர்தல் களத்தில் திமுக கூட்டணிதான் இடதுசாரிகளுக்கு அரவணைப்பாக இருந்தது.
இதனால் இடதுசாரிகள் 4 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியானது இடதுசாரிகளின் இருப்பை அறைகூவலாக சொல்வதற்கு பேருதவியாக இருந்தது. இந்த நிலையில் தற்போதைய சட்டசபை தேர்தல் களத்தில் இடதுசாரிகள் எதிர்பார்ப்பு என்ன என்கிற கேள்வி எழுகிறது.
அதிமுக அரசிடம் குவாரி உரிமம் பெற்ற துரைமுருகன் மருமகள்... ஜல்லி உடைத்த சிவி சண்முகம்- திகுதிகு திமுக
பாஜகவுக்கு எதிரான அணி
இது தொடர்பாக இடதுசாரி வட்டாரங்களில் பேசினோம். அவர்களைப் பொறுத்தவரை, அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின் நோக்கம். இதேபோல்தான் பாஜக அணியை மாநிலங்களில் வீழ்த்த வேண்டும் என்பதும் எங்கள் அஜெண்டா.
பீகார் பார்முலா
இதனைத்தான் பீகார் சட்டசபை தேர்தலில் கடைபிடித்தோம். பீகார் சட்டசபை தேர்தலில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட காரணத்தால்தான் அமோக வெற்றியை அறுவடை செய்தோம். பீகாரில் காங்கிரஸுக்கு சமமான தொகுதிகள் கிடைத்திருந்தால் பீகாரில் ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் இந்நேரம் அமைந்திருக்கும்.
திமுக- இடதுசாரிகள் இணக்கம்
இதே பார்முலாவைத்தான் தமிழகத்திலும் நாங்கள் பார்க்கிறோம். அகில இந்திய அளவில் திமுக உருவாக்கிய கூட்டணி ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்த கூட்டணியில் இடதுசாரிகள் நெளிவு சுளிவுகளுடன் நீடிக்கவே செய்யும். இதனை திமுக தலைமையும் உணர்ந்து எங்களுடன் தோழமையாக இருக்கிறது என்கின்றனர்.
திமுகவும் தேர்தல் செலவும்
அதேநேரத்தில் இன்னொரு விஷயத்தையும் இடதுசாரி வட்டாரங்கள் சொல்லுகின்றன. அதாவது தேர்தல் செலவுக்கான நிதியை திமுகவே ஒதுக்கிவிடுகிறது; இடங்களையும் கொடுத்து நிதியையும் கொடுத்து வாக்குகளையும் கொடுத்து எங்களை வெற்றி பெற வைக்கிற ஒரே கூட்டணி திமுகதான். ஆகையால் எந்த சூழ்நிலையிலும் திமுக அணியில் இம்மி கூட சலசலப்பு எங்களால் வராது என அடித்து சொல்கின்றனர்.