இன்று முதல்.. லாக்டவுன் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை.. தமிழக காவல்துறை வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் லாக்டவுன் விதிகளை கடுமையாக்க வேண்டும் என்று நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனால் விரைவில் லாக்டவுன் விதிகளை அதிகரிப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை
சென்னையில் ஏற்கனவே லாக்டவுன் கட்டுப்பாடுகள் இன்று மாலையோடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன் தீப் சிங் பேடி உத்தரவின் பெயரில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
அறிக்கை
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடிய கொரோனா தொற்று நோயைக் கட்டுபடுத்துவதற்கு 10.05.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்தது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் கொரோனா பரவாமல் இருக்க முக கவசம் அணிவது, கிரிமிநாசினி கொண்டு கைளைக் கழுவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
அறிவுரை
10.05.2021 முதல் நேற்று வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் கடந்த நான்கு நாட்களாக ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்கள் மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர். இவ்வறிவுரைகளைப் பொதுமக்கள் ஒரு சிலர் சரியாகவும் ஒழுங்காகவும் பின்பற்றாததால் கொடிய தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
நடவடிக்கை
இன்று (14.05.2021) முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி, கொரோனா தீவிரமாக பரவி வரும் இக்காலக்கட்டத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்து கொள்ளும்படி தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.