லெஜண்டுகளே பேக் அடிக்கும்போது.. விஜய்யும்.. விஜய் சேதுபதியும்.. செம தில்லுதான்!
சென்னை: நடிகர் ரஜினி போன்ற மூத்த நடிகர்களே பேச தயங்கும் விஷயங்களை துணிச்சலாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி போன்றோர் பேசிவருவது வியப்பானது தான். ஏனெனில் ஆளும் கட்சிகளையோ ஆளும் அரசுகளையே எதிர்த்தால் படத்துக்கு பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தும் தைரியமாக இருவரும் செயல்பட்டு வருகிறார்கள்.
Recommended Video
சினிமாவில் உள்ளவர்கள் , தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக போகிறவர்கள் அதிகம். அதையும் மீறி அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து தெரிவித்தாலோ அல்லது அநீதிகளை சினிமாவைப் போல் தட்டிக் கேட்கிறேன் குரல் கொடுக்கிறேன் என்று இருப்பவர்கள் மிக குறைவு. அதிலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் இதுவரை அப்படி குரல் கொடுத்தது.
நடிகர் ரஜினி காந்த் 1996ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தைரியமாக கருத்தை வெளியிட்டு திமுகவையும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் அப்போது சட்டசபை தேர்தலில் ஆதரித்தார். அந்த தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது. அதன்பிறகு 2004ல் பாமகவுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆனால் அப்போது அவரது வாய்ஸ் எடுபடவில்லை. அப்போது திமுக கூட்டணியில் பாமக இருந்தது. 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது. அதன்பிறகு ரஜினி எந்த இடத்திலும் பெரிதாக அரசியல் பேசவில்லை. யாரை எதிர்த்தும் குரல் கொடுத்தது இல்லை. குறிப்பாக ஆளும் அரசுகளை விமர்சித்து குரல் கொடுத்தது கிடையாது.
ஆச்சர்ய கருத்துக்கள்
இந்நிலையில் அப்படியே 16 ஆண்டுகள் கழித்து இப்போதைய ஆண்டான 2020ல் பார்த்தோம் என்றால் இளம் நடிகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் தைரியமாக ஆளும் கட்சியை மற்றும் மத்திய அரசுகளை விமர்சித்து குரல் கொடுத்து வருகிறார்கள். நேற்று நடந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வெளிப்படுத்திய கருத்துக்கள் சினிமா துறையினரை மட்டுமல்ல பொதுமக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
என்ன ஒரு தைரியம்
ஏனெனில், ரஜினி போன்ற மூத்த நடிகர்களே, சிஏஏ மற்றும் மதவாத சிந்தனைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்காத நிலையில் இவர்கள் தைரியமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்... இவர்கள் இருவரும் ரஜினியின் வயதிலும் அனுபவத்திலும் பாதிகூட வரமாட்டார்கள்... ரஜினி சினிமாவில் மிகப்பெரிய லெஜெண்ட் என்பதில் சந்தேகமே இல்லை.... ஆனால் ஒருமுறை கூற ரஜினி இப்படி பேசியது கிடையாது... அப்படியே பேசினாலும் அவை பாதி புரிந்தும் புரியாமலும் இருக்கும்... அப்படியே புரியக்கூடியவை அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவானதாகவே இருக்கும்!!!
மதம் அவசியம் இல்லை
நேற்று விஜய் சேதுபதி பேசுகையில், சாமிக்காக சண்டை போட்டுக்கிறவங்க.. சாமி பல கோடி வருஷமா இங்க இருக்கு.. அதை சாதாரண மனிதனால் காப்பாத்த முடியாது... கடவுள் மேல இருக்கான்... மனிதன் தான் இங்கே வாழ்கிறான். மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வரவேண்டும். மேல இருந்து எதுவும் வந்து காப்பாத்தாது. மதத்தின் பெயரை சொல்லி கடவுளை பிரிக்கிறார்கள். மதம் அவசியம் இல்லாதது... நம்புங்க ப்ளீஸ். மதமோ சாதியோ மனுஷன காப்பாத்தாது. கடவுளை காப்பாத்துறேன்னு சொல்லிட்டு இருக்குற கும்பல்களிடம் இருந்து தள்ளியே இருங்க. ஒருத்தன் ஏதாவது மதத்த பத்தி பேசுனா அதுக்கு தன்னோட மதத்துல இருக்கிறதுல இருந்து பேசாம மனிதத்தை மனிதநேயத்தையும் பேசுங்க. மனிதம் ஒன்றே மனிதனை காப்பாற்றும். கடவுள் எல்லாம் நம்மை காப்பாத்தாது. மனுஷங்கள நேசிக்கிறேன்..கடவுளை தள்ளி வச்சி தான் பாக்குறேன்" என்றார். விஜய் சேதுபதி. இந்த கருத்தின் மூலம் யாரை நேரடியாக எதிர்க்கிறார் என்பது ஊரறிந்த விஷயம்.
விஜய் பேச்சு
நடிகர் விஜய் பேசும் போது ‘'எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே'' என்ற பாடலில், ‘'நீ நதி போல ஓடிக்கொண்டிரு'' என்ற வரி இடம்பெறும். நதி போல ஓடிக்கொண்டிரு என்பதுதான் முக்கியம். கிட்டத்தட்ட அனைவரது வாழ்க்கையும் ஒரு நதி மாதிரிதான். சில இடங்களில் வணங்குவார்கள், வாழ்த்துவார்கள். சில இடங்களில் பிடிக்காதவர்கள் கல்லெறிந்து விளையாடுவார்கள். நதி பேசாமல் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த நதி மாதிரிதான் நம் வாழ்க்கையும். நமது வேலையை, நமது கடமையை செம்மையாக செய்துவிட்டு, அந்த நதி மாதிரி அமைதியாக போய்க்கொண்டிருக்க வேண்டும். லைப் இஸ் வெரி சார்ட் நண்பா. ஆல்வேஸ் பி ஹாப்பி. டிசைன் டிசைனா பிராப்ளம்ஸ் வில் கம் அன்ட் கோ. கொஞ்சம் சில் பண்ணும் மாப்பி. அவ்வளவுதான் மேட்டர்." என்றார்.
பிரச்சனைகளை கண்டு
விஜய் தனது பேச்சின் மூலம் யார் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும் நாம் செய்ய வந்ததை நிச்சயம் செய்வோம் என்கிறார். விஜய் தனது முந்தைய பேச்சுக்களில் எப்போதுமே மறைமுகமாக மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசை விமர்சித்தே வந்துள்ளார். எனவே பொதுவாக பார்த்தால் நடிகர் ரஜினி போன்ற மூத்த நடிகர்களே பேச தயங்கும் விஷயங்களை துணிச்சலாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி போன்றோர் பேசிவருவது வியப்பானது தான். ஏனெனில் ஆளும் கட்சிகளையோ ஆளும் அரசுகளையே எதிர்த்தால் படத்துக்கு பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தும் தைரியமாக இருவரும் செயல்பட்டு வருகிறார்கள்.
ரசிகர்கள்
பாஜக தரப்பு எதற்காக விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது என்பது இதுவரை நமக்கு புரியவில்லை.. இந்த ரெய்டுக்கு ரசிகர்கள் கொதித்து போனார்கள்... இவர்கள் ஆவேசம் அடைவதில் ஆச்சரியம் இல்லை.... ஆனால் எதிர்க்கட்சிகளும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து கடுமையாக இந்த ரெய்டு விவகாரத்தை விமர்சித்தனர்.... எனினும் சம்பந்தப்பட்ட விஜய் இதை இப்போதுவரை அமைதியாகவே எதிர்கொண்டு வருகிறார்.. இது அவரது பக்குவம்... அவர் நினைத்திருந்தால் ரசிகர்களை மறைமுகமாககூட தூண்டிவிட்டிருக்கலாம்.. ஆனால் அவர் அப்படி செய்யவில்லை!!!!
பாடம்
அதேபோல விஜய்சேதுபதியும்.. எதைபேசினாலும் அது விமர்சிக்கப்படும் என்று விஜய் சேதுபதிக்கு தெரியவே செய்யும்... தெரிந்தும் ஒரு குடிமகனாக அவரது பேச்சை வெளிப்படுத்த தவறுவதில்லை.. சமுதாய கடமையை ஆற்றுவதை யாருக்காகவும், எதற்காகவும் குறைத்து கொண்டதும் இல்லை.. மூத்த நடிகர்களுக்கும் சரி, இளைய நடிகர்களுக்கும் சரி, இன்றைய தலைமுறைகளுக்கும் சரி, மாணவர்களுக்கும் சரி விஜய், விஜய் சேதுபதியிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது!