குருதியிலே உறுதி கலந்து உழைப்போம் 2021ல் ஆட்சியை தொடர்வோம் - இபிஎஸ் சூளுரை
வழியெங்கும் வாகை நமக்காக காத்திருக்கிறது. திசையெங்கும் கிழக்காகும் தித்திப்பு காலம் நமக்காக பூத்திருக்கிறது.
சென்னை: 2021ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக ஆட்சியை தொடர்கிற அரசியல் புரட்சியை கழக உடன் பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்போடு நான் நிறைவேற்றி காட்டுவேன் என்பது சத்தியம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
வழியெங்கும் வாகை நமக்காக காத்திருக்கிறது. திசையெங்கும் கிழக்காகும் தித்திப்பு காலம் நமக்காக பூத்திருக்கிறது. இதற்காக குருதியிலே உறுதி கலந்து உழைப்போம். என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கழக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம் என சூளுரைத்துள்ளார்.
துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு...முதல்வர் பூங்கொத்து கொடுத்து நன்றி!!
ஆயுள்வரை நன்றி
உழவன் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிய சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது. இதற்காக என் ஆயுளின் கடைசி விநாடி வரை இந்த இயக்கத்திற்கு நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.
மூன்றாவது முறையாக தொடர் வெற்றி
வெறும் எழுத்துகளால் மட்டும் நான் உரைக்கும் நன்றி நின்று விடாது. 2021ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக ஆட்சியை தொடர்கிற அரசியல் புரட்சியை கழக உடன் பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்போடு நான் நிறைவேற்றி காட்டுவேன் என்பது சத்தியம்.
விவசாயி அரசு
மேலும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. அத்திக்கடவு அவிநாசி திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று உரிமையோடு ஓட்டு கேட்கும் வாய்ப்பை விவசாயி வழிநடத்தும் அரசு உங்களுக்கு வழங்கியுள்ளது என்று மெத்த பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்ஜிஆர் வழி
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என்ற புரட்சித்தலைவரின் பொன்மொழிகளை தினமும் ஏற்று பாடுவோம்.
வெற்றி வாகை சூடுவோம்
வழியெங்கும் வாகை நமக்காக காத்திருக்கிறது. திசையெங்கும் கிழக்காகும் தித்திப்பு காலம் நமக்காக பூத்திருக்கிறது. இதற்காக குருதியிலே உறுதி கலந்து உழைப்போம். என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.