அழகில் மயங்கினார்.. கொலையும் செய்தார்.. நாளை முதல் ஜெயில் வாசம் தொடங்கும் சரவண பவன் ராஜகோபால்!
அண்ணாச்சி ராஜகோபாலுக்கு நாளை முதல் ஆயுள் தண்டனை அமலுக்கு வருகிறது
Recommended Video
சென்னை: பெண்ணாசையால் ஒட்டுமொத்த பெயரையும் கெடுத்து கொண்ட சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் நாளை முதல் தனது தண்டனையை அனுபவிக்க உள்ளார். 71 வயதாகும் அண்ணாச்சி, தனது இறுதி மூச்சுவரை சிறையிலேயே கழிக்க வேண்டிய நீதிமன்ற தீர்ப்புக்கு ஆளாகி உள்ளார்.
அன்றைய தினங்களில் சினிமாக்களையும், சீரியல்களையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பத்திரிகைகளில் முக்கிய இடத்தை பிடித்தவர்தான் ஜீவஜோதி என்ற இளம்பெண்!
ஜீவஜோதியின் தந்தை, சரவணபவன் ஹோட்டலில் மேனேஜராக வேலை பார்த்தவர். இப்படித்தான் ஜீவஜோதியின் குடும்பத்தில் சரவண பவன் ஓனர் ராஜகோபாலுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஜீவஜோதியின் அழகில் மயங்கி விழுந்தார் ராஜகோபால்! ஏதோ ஒன்றில் ஜீவஜோதியால் ஈர்க்கப்பட்டு விட்டார்!
அடைய ஆசைப்பட்டார்
அதற்காகவே அந்த குடும்பத்திற்கு பல உதவிகளை செய்தார் . ஆனால், ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்தார். திருமணமும் செய்துகொண்டார். இது அண்ணாச்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏற்கனவே 2 மனைவிகளை உடைய அண்ணாச்சி, 3-வதாக ஜீவஜோதியை முழுசாக அடைய முயற்சித்தார்.
விட்டு தர மாட்டேன்
இதற்காக கணவர் சாந்தகுமாரை அழைத்து மிரட்டியுள்ளார். ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், சாந்தகுமாரை விலகும்படியும் சொன்னார். கொலை செய்யும் எண்ணம் ஆனால் காதலித்த கணவன் சாந்தகுமாரோ இதற்கெல்லாம் மசியவில்லை. மனைவியை விட்டுத்தர முடியாது என்று துணிந்து அண்ணாச்சி முகத்தை பார்த்து சொன்னார். இதுதான் கொலை செய்யவும் அண்ணாச்சியை தூண்டியது.
போலீசில் புகார்
கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி சாந்தகுமார் கடத்தப்பட்டார். புருஷனை காணவில்லை என்று பதறிபோய் ஜீவஜோதி போலீசில் புகார் தந்தார். போலீசும் தீவிரமாக தேடியலைந்தார்கள். கடைசியில், 5 நாட்களுக்கு பிறகு கொடைக்கானல் மலை அடிவாரத்தில் சாந்தகுமாரின் உடலை கண்டெடுத்தனர்.
உயிர் போனது
அப்போது இந்த விவகாரத்தில் ராஜகோபால் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார் என்றே அனைத்து தரப்பிலும் நம்பப்பட்டது. ஆனால் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு காரில் கடத்தி செல்ல ஐடியா தந்ததே ராஜகோபால்தான் என தெரியவந்தது. காரில் செல்லும்போதே சாந்தகுமார் கழுத்து நெறிக்கப்பட்டது.. கொடைக்கானல் மலை உச்சிக்கு செல்வதற்குள் பல சித்ரவதைகள் வந்து போயின.. அப்போதே பாதி உயிர் போயிற்று.. இறுதியாக உச்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டார் சாந்தகுமார்.
தண்டனை
கடைசியில் தமிழகம் முழுக்க நாறிப் போனார் ராஜகோபால். 2009-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை அளித்தது. ஆனால் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும் ராஜகோபாலின் தண்டனையை சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் மாதம் உறுதி செய்ததுடன், ஜூலை 7-ம் தேதி அதாவது நாளை கோர்ட்டில் ஆஜராகி அதன்பின்னரே சிறைக்கு செல்ல வேண்டும் என்று சொன்னது.
ஆயுள் தண்டனை
அதனால் நாளை ராஜகோபால் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் சரண் அடைவார் என்று தெரிகிறது. அதன்பின்னரே அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அப்போது முதல் இவரது தண்டனை காலம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்க்கை முழுசும்..
இப்போது ராஜகோபாலனுக்கு வயசு 71 ஆகிறது. இனி வரப்போகும் எல்லா நாளும் ஜெயிலிலே இவருக்கு கழிய உள்ளது. சென்னை முதல் துபாய் வரை உலகம் முழுவதும் எத்தனையோ பேருக்கு சோறு போட்ட அண்ணாச்சி, நாளை முதல் களி தின்னும் நிலைமைக்கு ஆளாக போகிறார் என்பதுதான் காலத்தின் கோலம்!