இது தான் மோடி- ஜின்பிங் நின்ற இடம்.. நம்ம புள்ளிங்கோ செல்பி.. மீண்டும் களைக்கட்டிய மாமல்லபுரம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்று விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் மாமல்லபுரம் நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கடந்த அக்டோபர் 11ம் தேதி மாலையில் மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை பார்வையிட்ட படி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 8-ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும் மாமல்லபுரம் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
எதிர்வரும் சில வருடங்கள் மோசமாக இருக்கும்.. கவனம் தேவை.. மாமல்லபுர வருகைக்கு பின் ஜின்பிங் அறிக்கை!
பாதுகாப்பு தளர்வு
இதனால் மாமல்லபுரத்தின் சாலைகள் வெறிச்சோடியது. முற்றிலும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட மாமல்லபுரம் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிறைவடைந்த பின்னர் சனிக்கிழமை பிற்பகலுக்கு மேல் பாதுகாப்பு தளர்த்தப்பட்டது.
அழகை ரசித்தனர்
இதற்கு தான் காத்திருந்தோம் என்பது போல் நேற்று பிற்பகலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சாரை, சாரையாக புராதனச் சின்னங்களைக் காண வந்தனர். மாமல்லபுரத்தின் தூய்மை மற்றும் அழகை பார்த்து சுற்றுலாப் பயணிகள் வியந்தனர்.
கடற்கரைக் கோயில்
சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடியின் வருகைக்காக புதுப்பொலிவுடன் காட்சியளித்த ஐந்துரதம், கடற்கரைக் கோயில், அர்ஜுனன் தபசு, குடைவரை மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களை மகிழ்ச்சியுடன் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்த்தனர். அப்படியே இது தான் மோடி- ஜின்பிங் நின்ற இடம் என்று தேடித்தேடி நின்று செல்பி எடுத்தனர்.
இயல்பு நிலைக்கு திரும்பியது
வெண்ணெய் உருண்டைப் பாறை அருகில் சிறுவர், சிறுமிகளின் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. மாமல்லபுரத்தில் நேற்று விடுமுறை என்பதால் பல குழந்தைகள் அந்த இடத்தில் ஜாலியாக விளையாடினர். இதன் மூலம் மாமல்லபுரம் நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது. இதனிடையே இன்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தை நோக்கி குவிந்து வருகிறார்கள்