பல மாவட்டங்களில் கனமழை.. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, நீலகிரி, நாமக்கல், பெரம்பலூர், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை பரவலாக மழை பெய்தது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை தொடங்கி இன்று காலை வரை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. வெப்பச்சலனத்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி , தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், கோவை, திருப்பூர, ஈரோடு, சேலம், நாமக்கல் , தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பரவலாக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தின் பூந்தமல்லி, பூண்டி, சோழவரம், ரெட் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்துக்கட்டியது.. இந்த மழையால் சென்னைக்கு நீர் வழங்கும் பூண்டி மற்றும சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கனமழை
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தின் பாம்பன் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
விருதுநகரில் மழை
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், சென்னைக்கு வெளியே உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி, கோவிலாங்குளம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்தது.
பரவலாக மழை
இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசி, சங்கரன் கோவில் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. தேனி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தஞ்சாவூர்,புதுகோட்டை, கோவை உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.
கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பூந்தமல்லியில் 11 செ.மீ மழை பெய்தது. பாம்பனில் 10 செ.மீ மழையும், திருநெல்வேலி மாவட்டம் அய்யக்குடி 9 செமீ மழையும் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 9 செமீ மழையும் பெய்தது. இதனிடையே தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.