அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு
Recommended Video
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போதிய மழை இல்லாமல் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு விவாத பொருளாக மாறி உள்ளது.
சென்னையில், மழை எப்போது தலைகாட்டும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக விட்டு, விட்டு பெய்து வரும் மழை ஆறுதலை அளித்துள்ளது. இந்தநிலையில், அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருத்தணி, கடலூர், தேனி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பூந்தமல்லி மற்றும் கலவையில் 6 சென்டிமீட்டரும், அண்ணா பல்கலைக்கழகம், தரமணி, செம்பரம்பாக்கம், மதுராந்தகத்தில் 4 சென்டிமீட்டரும், வடசென்னை, கேளம்பாக்கம், காரைக்கால், வந்தவாசியில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.