ஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video
சென்னை: வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும், குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 சென்டிமீட்டர் மழையும், வேலூர் மாவட்டம் கலவையில் 5 சென்டி மீட்டர் மழையும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தண்டம் துறை, வல்லவிளை, நீரோடி, உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் இருப்பதால், மணல் மூட்டைகளை அடுக்கி மக்களே பாதுகாப்பு வேலி அமைத்து வருகின்றனர். கடல் சீற்றம் அதிகரித்தால் வீடுகள் சேதமடையும் அபாயம் இருப்பதாகக் கூறும் கிராம மக்கள், அங்கு தூண்டில் வளைவு அமைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.