காலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு
Recommended Video
சென்னை: சென்னையில் காலை முதல் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து குளிர்ந்த காற்று வீசிவருவதால் இதமான குளிர் நிலவுகிறது. இந்த மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
கோடைக்காலத்து மேகங்கள் சுத்தமாக எட்டிபார்க்காததால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் கார் காலத்தை கடந்த 6 மாதங்களாக கண்ணிலேயே பார்க்கவில்லை. இதனால் சென்னை மக்களை வெயில் சுட்டெரித்து வாட்டி வைத்தது. இது ஒருபுறம் எனில் 6 மாதமாக மழை விழுகாத காரணத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு போயின. இதனால் தண்ணீரே இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் தான் கடந்த வாரம் திடீரென மழை பெய்தது. இந்த மழையை கண்டு சென்னை வாசிகள் மிகுந்த சந்தோஷப்பட்டனர். ப6ல நாள் பட்டினியில் கிடந்தவருக்கு பிரியாணி கிடைத்ததைப் போல் உணர்ந்து மக்கள் அன்றைக்கு மழையை அனுபவித்தனர். சென்னை மழை நேஷனல் டிரெண்டிங் ஆனது.
இந்த சந்தோஷம் இன்றும் கிடைத்துள்ளது சென்னை மக்களுக்கு.. ஆம்.. காலையில் இருந்தே ஊதக்காற்று அடித்துக்கொண்டிருந்தது. பின்னர் மேகங்கள் கூட்டமாகி மெல்லிய மழைச் சாரலை, திருப்பித்தருவேன் என்ற உத்தரவாதத்தோடு வங்ககடலிடம் இருந்து கடன் வாங்கி வந்து கொட்டிச் சென்றன.
இதன் காரணமாக சென்னையில், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, வில்லிவாக்கம் அண்ணாநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனிடையே வங்கக்கடலில் வளிமண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயில் குறைந்து மாலை அல்லது நள்ளிரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.