உங்களை போலவே ஆவலுடன் மோடியின் உரையை எதிர்பார்க்கிறேன்.. ப சிதம்பரம் கேட்ட முக்கிய கேள்வி
சென்னை: நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி தொடங்கி ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்தார். அதன்படி ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000த்தை தாண்டி உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கிடையே தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏப்ரல் இறுதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு (ஏப் 14) நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். இந்த உரையில் ஊரடங்கு நீட்டிப்பு எத்தனை நாள் என்பதையும், மக்களுக்கு ஊரடங்கில் அறிவிக்கப்பட உள்ள சலுகைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளார். மேலும் பொருளாதாரத்தை வலுப்படுத்த சில தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி என்ன உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப சிதம்பரம் டுவிட்டரில் பிரதமர் மோடியின் உரையை மக்களை போல தானும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட் பதிவில், "நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன். ஊரடங்கை 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது.
ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே? 21 நாட்களாகத் தவிக்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி.
பணம் இருக்கிறது. மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ 30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம்
நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன்
— P. Chidambaram (@PChidambaram_IN) April 13, 2020
ஊரடங்கை 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது
இந்த ரூ 30 லட்சம் கோடியில் ரூ 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா மாட்டாரா என்பது தான் கேள்வி
நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்" ,இவ்வாறு கூறியுள்ளார்.