தமிழகத்தில் மதுபானங்கள் விலை அதிரடியாக ரூ10 முதல் ரூ20 வரை உயர்வு-நாளை முதல் கடைகள் திறப்பு
சென்னை: லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபானங்கள் விலையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 40 நாட்கள் லாக்டவுன் காலத்தில் மதுபான கடைகளும் மூடப்பட்டிருந்தன. மிக நீண்ட நாட்கள் மதுபான கடைகள் மூடப்பட்டதால் நிரந்தரமாக அவற்றை மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுனை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதேநேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தளர்த்தியது.
பெரும் கூட்டம் திரண்டது
இதனால் பல மாநிலங்களில் மதுபான கடைகளும் திறந்துவிடப்பட்டன. கடந்த 2 நாட்களாக மதுபான கடைகள் முன்பாக பெரும் கூட்டம் திரண்டு நிற்கிறது. பல மணிநேரம் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் டெல்லி, ஆந்திரா அரசுகள் மதுபானங்களின் விலையை 70% அளவுக்கு உயர்த்தின. ஆனாலும் குடிமகன்கள் விலையையும் பொருட்படுத்தாமல் பெரும் கூட்டமாக கூடி வாங்கி செல்கின்றனர்.
ஜரூர் ஏற்பாடுகள்
இதனிடையே தமிழகத்தில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்கப்படுகின்றன. சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் இங்கு மட்டும் மதுபான கடைகள் திறக்கப்படவில்லை. பிற மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்படுகின்றன. இந்த கடைகளில் சமூக விலகல் என்கிற தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குடிமகன்களை வரிசையில் நிற்க வைக்க சவுக்கு கட்டைகளிலான தடுப்புகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்திலும் விலை உயர்வு
மேலும் டெல்லி, ஆந்திரா பாணியில் தமிழகத்திலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபானங்கள் விலையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. மதுபான பாட்டில்கள் விலை ரூ. 10 முதல் ரூ. 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மதுகடை திறப்புக்கு எதிர்ப்பு
ஆனால் தமிழகத்தில் மீண்டும் மதுபான கடைகளைத் திறக்கக் கூடாது என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. அதுவும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் மதுபான கடைகளை திறந்தால் நிலைமை மோசமாகும் என்றும் எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. இதனிடையே தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து தங்களது வீடுகளில் இருந்து இன்று போராட்டம் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.