மூன்று நாட்களுக்குள் திமுக வேட்பாளர் பட்டியல்… மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி இரண்டு அல்லது மூன்று நாட்களில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்.எம். வீரப்பன், சுப. வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி, எஸ்றா சற்குணம், செல்லமுத்து, திருப்பூர் அல்தாப், பார்வர்ட் பிளாக், சமத்துவ மக்கள் கழகம் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திமுகவின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
முதல் வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸிங்.. ஒருவேளை பிரியங்காவுக்கு வேற பிளான் வச்சிருக்கா காங்கிரஸ்..!
இரண்டொரு நாளில் அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும் என்றார். எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து நாளை காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறினார்.
பேச விரும்பவில்லை
தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்த கருத்து குறித்து, பேச விரும்பவில்லை என்ற மு.க. ஸ்டாலின். தேமுதிக விஷயத்தில் துரைமுருகன் தேவையான விளக்கங்களை கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.
மோடி குறித்து விமர்சனம்
ரஃபேல் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை எப்படி பாதுகாப்பார் என்று கேள்வி எழுப்பினார். அடிக்கடி தமிழகம் வரும் மோடி , தேர்தலுக்காக ஒரு நாடகத்தை நடத்தி கொண்டிருப்பதாகவும் விமர்சனம் செய்தார்.
புதியவர்களுக்கு வாய்ப்பு?
திமுக சார்பில் நடத்தப்பட்ட 12,500 கிராமசபை கூட்டங்களில் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திமுக வேட்பாளர் யார், யார் என்பது இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அப்போது கண் கூட தெரியும் என்றும் விளக்கம் அளித்தார்.
ஜனநாயக படுகொலை
நாடாளுமன்ற தேர்தலோடு 21 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று நம்புவதாகவும், ஆனால் இடைத்தேர்தலை அதிமுக மற்றும் பாஜக தடுக்க முயற்சி செய்து வருவதாகவும், இது ஜனநாயக படுகொலை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
வேட்பாளர் பட்டியல்
21 சட்டமன்ற இடைத்தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தப்பட்டால், அத்தனை தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். விரைவில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என்றும் கூறினார்.