மேய்ச்சல் நிலம் இல்லாமல் தெருவில் மேயும் மாடுகள்.. அரசின் பயன்படாத நிலத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
சென்னை: மேய்ச்சல் நிலம் இல்லாமல் தெருவில் மாடுகள் மேயும் அவலநிலையை போக்க அரசுக்கு பயன்படாத நிலங்களை வழங்க கால்நடை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கால்நடை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் ஆர் சுரேஷ் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தங்க சாந்தகுமார் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சி பாலாஜி, மாநில துணை தலைவர்கள் ஆர் நாராயணன், துரை நரசிம்மன், மாநில துணை செயலாளர் எம் கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.
இவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு:
1. பல தலைமுறையாக, கலாச்சாரம் மிகுந்த தொழிலான கறவை மாடுகள் வைத்து சென்னை சுற்றியுள்ள இடங்களில் கால்நடை வைத்து பாதுகாத்தும் பராமரித்தும் பால் வியாபாரம் செய்து வரும் கால்நடை விவசாயிகளின் குடும்பங்கள் தற்போது மேய்ச்சல் நிலம் இல்லாமல் அதே தொழிலை நம்பி வாழ்கிறார்கள். சாலைகளில் மாடுகள் சுற்றித் திரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் உள்ளது.
கால்நடை விவசாயிகள் மாடுகட்டி பராமரிக்கவும் பாதுகாத்து வளர்க்கவும் அரசுக்கு பயன்படாத நிலங்களை அந்தந்த பகுதியுள்ள கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து சென்னையில் கால்நடைகளை பாதுகாக்கவும் அதை நம்பியுள்ள கால்நடை விவசாயி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், ஆவன செய்ய வேண்டும்.
2. சென்னை பெருநகர எல்லைக்குள்பட்ட இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து விதிக்கும் அபராத தொகை கடந்த 31.3.2018 வரை ரூ 1550 ஆக இருந்த நிலையில் 1.4.2018 முதல் 7 மடங்காக ரூ. 10,750ஆக உயர்த்தியதை ரத்து செய்து பழைய அபராதத் தொகையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நீதி கேட்கும் பசுவின் கேள்விகள்?
1. சென்னையில் மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் எங்களை தெருவில் மேய விடுவது எந்த வகையில் நியாயம்? எங்களுக்கும் நீதி வேண்டும்?
2. குற்றவாளிகளுக்கு தானே தண்டனையும் அபராதமும் எங்களுக்கு ஏன் மூன்று நாள் சிறை தண்டனை ரூ 10,750 அபராதம். எங்களுக்கு இடம் தராமல் தவறு செய்வது பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம், தண்டனை எங்களுக்கா?
3. எங்கள் உதிரத்தை பாலாக்கி எங்கள் பிள்ளைகளை பட்டினி போட்டு உங்கள் குடும்பத்திற்கு பால் வார்க்கும் எங்கள் தியாகத்தை மறந்தும் எங்களை பாதுகாத்து பராமரித்து பணி செய்து தன் குடும்பத்தையும் பாதுகாக்கும் கால்நடை விவசாயிகளுக்கு துரோகம் இழைக்காதீர்கள்.
4. மனுநீதி சோழனிடம் நீதி கேட்ட வரலாற்றை நினைவூட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களை சிலையாக வைத்த நல்ல இதயங்களே.. நாங்கள் உயிர் வாழ சென்னையில் இடம் தாருங்கள்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கால்நடை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.