ராஜ்யசபா தேர்தல்: திமுகவில் 3 சீட்டு..ஈரோடு முத்துச்சாமி, சிவசங்கர், என்.ஆர். இளங்கோ போட்டா போட்டி
சென்னை: திமுகவில் ஈரோடு முத்துசாமி, அரியலூர் எஸ்.எஸ்.சிவசங்கர், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கான லாபிகளில் அவர்களது ஆதரவு வட்டாரங்கள் படுதீவிரமாக இறங்கியுள்ளன.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ந் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து மார்ச் 26-ந் தேதி இந்த காலி இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சட்டசபையில் தற்போதைய எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் தலா 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் கிடைப்பது உறுதி.
நீங்க எங்க கூட தான் இருக்கீங்க... என்ன சந்தேகம்... வேல்முருகனுக்கு நம்பிக்கை தந்த ஸ்டாலின்
என்.ஆர். இளங்கோவுக்கு வாய்ப்பு?
திமுகவைப் பொறுத்தவரையில் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் முடிவடையும் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்படுகிறது. மூன்று அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை காரணம் காட்டுகின்றனர் திமுக சீனியர்கள். மேலும் கடந்த ராஜ்யசபா தேர்தலின் போதே மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் வில்சனுக்கு ராஜ்யசபா சீட் கிடைத்தது. இதனால் இம்முறை திமுகவில் என்.ஆர். இளங்கோவுக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். அதேநேரத்தில் ஜாதிய அடிப்படையில் என்.ஆர். இளங்கோவின் சமூகத்துக்கு இத்தனை பிரதிநிதித்துவமா? என்கிற சில இடையூறு கேள்விகளும் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.
உதயநிதி கோட்டா?
என்.ஆர். இளங்கோவைத் தவிர திமுகவில் ராஜ்யசபா சீட்டுக்கு அடிபடும் பெயர் ஜின்னா. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் நெருக்கமான வட்டாரத்தில் இருப்பவர் என்பதால் அந்த கோட்டாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கின்றன சில தகவல்கள். இதற்கான கிச்சன் கேபினட் லாபியும் படுதீவிரமாக இருக்கிறதாம்.
கொங்கு மண்டல லாபி
இருப்பினும் திமுக தலைமையானது கொங்கு மண்டலத்தில் கட்சி செல்வாக்கை மீட்டெடுக்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் கொங்கு மண்டல சீனியர் ஒருவருக்கு நிச்சயம் ராஜ்யசபா சீட் கிடைக்கலாம் என்கிற கருத்தும் தலைமையிடம் முன்வைக்கப்பட்டு வருகிறதாம். இதனடிப்படையில் சீனியரான ஈரோடு முத்துசாமிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கலாம் என்கின்றன திமுக வட்டாரங்கள்.
வடமாவட்டத்துக்கு வாய்ப்பு?
பொதுவாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படுவது வழக்கம். இம்முறை தென்மாவட்ட பிரதிநிதியாக லோக்சபா எம்.பி. கனிமொழி இருப்பதால் அந்த கோட்டா இல்லை என்கிற தகவலும் உலா வருகிறது. இதற்கு பதிலாக வடமாவட்டத்தில் பெரும்பான்மை ஜாதியான வன்னியரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கின்றன அறிவாலய தகவல்கள்.
எஸ்.எஸ்.சிவசங்கருக்கு ராஜ்யசபா சீட்?
வடமாவட்டத்தில் திமுக தலைமையின் நம்பிக்கைக்குரிய செயல்பாட்டாளர்களில் ஒருவரான அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கலாம். கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் சிவசங்கரனின் தந்தை சிவசுப்பிரமணியம் நெருக்கமானவராக இருந்தார். சிவசுப்பிரமணியத்துக்கு ராஜ்யசபா பதவி கொடுத்தார் கருணாநிதி என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர் திமுகவினர். அதனால் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.