முரண்டு பிடிக்கும் கூட்டணிக் கட்சிகள்... அப்செட் நிலையில் அதிமுக
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா நடைபெறாதா என ஒரு புறம் விவாதம் நடக்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது அதிமுக.
தேமுதிக, பாமக, பாஜக, த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் சுமார் 20 நிமிடம் வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், தேமுதிக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் சீட் விவகாரத்தில் முரண்டு பிடித்ததாகவும், இதனால் பேச்சுவார்த்தை ஒரு முழு வடிவம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதிமுக பேச்சு
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கும் நிலையில், அதிமுக அதன் கூட்டணிக் கட்சி பிரமுகர்களை அழைத்து என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என நூல் விட்டு பார்த்தது. அதில் நேரடி தேர்தலோ, மறைமுகத் தேர்தலோ அதைப்பற்றி கவலையில்லை எத்தனை நகராட்சி, எத்தனை மாநகராட்சி வழங்குவீர்கள் என கூட்டணிக் கட்சியினர் அதிமுகவிடம் கேள்வி எழுப்பினர்.
முதற்கட்டம்
இப்போது தானே முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்துகிறோம், இன்னும் எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் என அதிமுக தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் அளித்த மாநகராட்சி பட்டியல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களிடம் மட்டும் நேற்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆலோசித்துள்ளார்கள்.
மறுப்பு
தேமுதிக மதுரை மாநகராட்சியை தங்களுக்கு அளித்தே ஆக வேண்டும் என நெருக்கடி தருவதாக அமைச்சர் செல்லூர் ராஜுவிடமும், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிடம் அதிமுக தலைமை கூறியுள்ளது. இதனால் உஷ்ணமான அவர்கள் இருவரும், அண்ணே அது மாதிரி மட்டும் எந்த முடிவும் எடுத்துடாதீங்க, மதுரையை கூட்டணிக் கட்சிக்கு கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிவிட்டார்களாம்.
பிரச்சனையில்லை
பாமகவை பொறுத்தவரை அதிமுகவுக்கு பெரியளவு நெருக்கடியை அளிக்கவில்லையாம். ஆவடி தான் அதன் முக்கிய இலக்காம். இதேபோல் த.மா.கா.வுக்கு மாநகராட்சி கிடையாது என்றும், உரிய எண்ணிக்கையில் நகராட்சிகளை தருவதாகவும் அதிமுக தரப்பில் முதற்கட்டமாக பேசப்பட்டுள்ளது.