மகனும் தோல்வி.. மகளும் படுதோல்வி... பெரும் விரக்தியில் அன்வர் ராஜா.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்!
அன்வர் ராஜா மகனும், மகளும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்
சென்னை: அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜாவின் மகளும், மகனும் ஒருசேர தோல்வியை தழுவி உள்ளது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.. இந்த இரட்டை தோல்விக்கு என்ன காரணம்? யார் காரணம்?!
அன்வர்ராஜா.. அதிமுகவின் மூத்த தலைவர்.. ராமநாதபுர மாவட்டத்தின் பிரதான அரசியல்வாதி.. எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்ததில் இருந்து உறுப்பினராக இருந்து வருகிறார்.. ஜெயலலிதா காலத்திலும் தனி செல்வாக்குடன் திகழ்ந்தவர்.. பல சமயங்களில் இவரது துணிச்சல் பேச்சு அபாரமானவை!
முத்தலாக் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் "இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது, இறைவனுக்கு எதிரானது" என்று குரல் கொடுத்தவர்.. இந்த சமயத்தில்தான் எம்பி தேர்தலுக்கு ராமநாதபுரத்தில் சீட் வாங்குவதில் கட்சிக்குள் பஞ்சாயத்து ஆரம்பமானது.
87 ஒன்றிய கவுன்சிலர்கள்; 8 மாவட்ட கவுன்சிலர்கள்- எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு-இடதுசாரிகள் கெத்து
மணிகண்டன்
அன்வர் ராஜாவுக்கும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தமாகவே உள்ளது.. இருவருமே இந்த தொகுதியில் போட்டியிட அதிமுகவை அப்போது நெருக்கி கொண்டிருந்தார்கள். இந்த கோஷ்டி பூசலை பார்த்து அரண்டு போன அதிமுக, பேசாமல் ரெண்டு பேருக்கும் சீட் தராமல், கூட்டணி கட்சியான பாஜகவுக்கே தொகுதியை ஒதுக்கலாம் என அதிமுக முடிவு செய்துதான் நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கியது வேறு கதை!
குடைச்சல்
இளம் வயது எம்எல்ஏ, மூத்த தலை அன்வர் ராஜாவுக்கு பெருத்த குடைச்சலை தருவதாக சொல்லப்பட்டது.. சீனியர்களுக்கு மரியாதை தருவதில்லை, சகட்டுமேனிக்கு யாரையும் விமர்சிப்பது போன்ற குற்றச்சாட்டுகளால் கட்சிக்குள் மணிகண்டன் மீது கடும் அதிருப்தி.. போன வருஷம் அமைச்சர் பதவியும் பறிபோனது.. இந்த நேரத்தில்தான் நீண்ட நாட்களுக்கு பிறகு அன்வர் ராஜாவுக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது.. பழைய செல்வாக்கு திரும்பவும் கிடைத்தது.
உள்ளாட்சி தேர்தல்
ஆனாலும், அன்வர் ராஜாவுக்கு தொடர் குடைச்சலை மணிகண்டன் தந்து கொண்டே இருப்பதாக சொல்லப்பட்டது.. எம்பி தேர்தல் மட்டுமல்லாமல், இப்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வரை இந்த சலசலப்பு பேச்சு நீடித்துதான் வந்தது.. எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் மிக்க செல்வாக்குடன் இருந்தபோதுகூட தனது குடும்பத்தினரை அரசியலுக்கு இழுத்து வரவில்லை அன்வர் ராஜா.
தூத்துக்குடி கயத்தாறு ஒன்றியத்தை கைப்பற்றிய அமமுக.. அதிமுக பரிதாப தோல்வி
தீவிர பிரச்சாரம்
போன முறை எம்பி தேர்தலில் வாய்ப்பு மறுப்பு.. ராஜ்ய சபா பதவியும் மறுப்பு.. என்ற தொடர் அதிருப்திகளுக்கு பிறகுதான், உள்ளாட்சித் தேர்தலில் மகனையும், மகளையும் வேட்பாளர்களாக நிறுத்தினார். குறிப்பாக இஸ்லாமியர்கள் மிகுந்த தொகுதியில்தான் பிள்ளைகளை வேட்பாளர்களாக களம் இறக்கினார். இவர்களுக்காக தீவிரமான பிரச்சாரமும் செய்தார்.. ஆனால், அவரது ஆசை அத்தனையும் மண்ணாகிவிட்டது.
மகன், மகள்
மண்டபம் ஒன்றியம் 2-வது வார்டில் போட்டியிட்ட மகள் ராவியத்துல் அதரியா தோல்வியை தழுவினார்.. திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி 1,343 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல, அன்வர்ராஜா மகன் நாசர் அலியும் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதற்கு காரணம் மணிகண்டனின் உள்ளடி வேலைதான் என்கிறார்கள் அன்வர் ராஜா ஆதரவாளர்கள்.. மணிகண்டன் தரப்பு பணத்தை விநியோகித்து, வெற்றி வாய்ப்பை தட்டி பறித்துவிட்டதாக அன்வர் ராஜா ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மதச்சார்பின்மை
"பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுவதால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து வருகிறது. தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு நாடு முழுக்க நடைமுறைப்படுத்தப்படும் என்ற அச்சம் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் இறையாண்மை மற்றும் மதசார்பின்மைக்கு பாதிப்பு வந்துவிடும். எனவே அதிமுக, மத்திய அரசின் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்" என்று சில தினங்களுக்கு முன்பு அன்வர்ராஜா தனது கருத்தை ஆழமாகவே தெரிவித்திருந்தார்.
மணிகண்டன் தரப்பு
ஆனால், நாசர் அலிக்காக அச்சிடப்பட்ட பிட் நோட்டீஸ்களில் மோடியின் போட்டோவை போட்டு.. அதை தனது ஆதரவாளர்கள் மூலம் வாக்காளர்களிடம் மணிகண்டன் தரப்பினர் வினியோகித்து விட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. அதனால் அன்வர்ராஜா மகன், மகள் தோல்விக்கு முழுக்க முழுக்க மணிகண்டனைதான் ஒட்டுமொத்தமாக காரணம் காட்டுகிறார்கள்.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை.. ஆனால், ஒரு மூத்த அதிமுக தலைவரின் வாரிசுகள் இருவருமே தோல்வியால் துவண்டு போயுள்ளது ராமநாதபுர அதிமுகவினருக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்!