விறுவிறுப்படைந்த வேட்புமனுத் தாக்கல்... வேகமெடுத்த உள்ளாட்சித் தேர்தல்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் நேற்று பிற்பகல் தீர்ப்பு கூறியது முதல், தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகள் திடீர் வேகம் எடுத்துள்ளன.
உச்சநீதிமன்ற தீர்ப்பை பார்த்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என காத்திருந்தோர் நேற்று பிற்பகல் முதலே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
தொலைக்காட்சிகளில் தீர்ப்பு பற்றிய விவரம் வெளியாகிய அடுத்த ஒரு மணி நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் நேற்று 777 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் திமுகவில் இருந்து விலகுகிறேன்... ஸ்டாலினை நேரில் சந்தித்து குட்பை சொன்ன பழ. கருப்பையா
உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தலை முறைபடி நடத்தக்கோரி திமுக உச்சநீதிமன்றத்தை நாடியிருந்ததால் அது தொடர்பான தீர்ப்புக்கு பின்னர் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என பெரும்பாலானோர் கருதியிருந்தனர். இந்நிலையில் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டதால், இப்போது போட்டி போட்டுக்கொண்டு ஊரகப்பகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
திருவிழா
தமிழகம் முழுவதும் நேற்று வரை களையிழந்து காணப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகள் இன்று திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரங்களையும் தொடங்கிவிட்டனர் வேட்பாளர்கள். இதனால் கிராமங்களில் மைக் செட் அலறத் தொடங்கியுள்ளது.
சொந்த பந்தம்
ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் சொந்தபந்தங்களை தேடிச்சென்று மாமா, பெரியப்பா, சித்தப்பா என உறவுகளை உரிமையோடு அழைத்து தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வலம் வரத் தொடங்கிவிட்டனர். மொத்தத்தில் ஜனவரி 2-ம் தேதி வரை ஊரகப் பகுதி மக்கள் பிஸியாக இருக்கப் போகிறார்கள்.
தேர்தல் இல்லை
இதனிடையே பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் தேர்தலுக்கான தடமே இங்கெல்லாம் தெரியவில்லை. மேலும், நகர மக்களில் சிலர் சொந்த கிராமங்களில் வாக்குரிமை வைத்திருப்பவர்கள் தேர்தல் அன்று ஊருக்கு சென்று வாக்களிக்கவும் தயாராகி வருகின்றனர்.