மாஸ்டர் பிளானில் எடப்பாடியார்.. கோர்ட்டை மீண்டும் நாடும் திமுக.. உள்ளாட்சி தேர்தல் பரபரப்புகள்!
உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக-திமுக வியூகங்களை அமைத்து வருகின்றன
சென்னை: உள்ளாட்சி தேர்தலை எப்படியாவது நடத்திவிடுவது என்று அதிமுகவும், அதை எப்படியாவது நடத்தாமல் தடுத்துவிடுவது என்று திமுகவும் படு மும்முர வேலைகளில் இறங்கி உள்ளனர்!
உள்ளாட்சி தேர்தல் குறித்த தமிழக அரசின் அறிவிப்புகளும் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வருகின்றன. எனவே 9 மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிசாமிஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்கு காரணம், அதிமுகவுக்கு இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகுகூடியுள்ள மவுசுதான்.. இந்த செல்வாக்கினை அப்படியே உள்ளாட்சி தேர்தலில் அப்ளை பண்ணவும் அதிமுக கடுமையாக முயன்று வருகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தனது ஆதரவாளர்களையே நிறுத்தி, அவர்களை அரவணைத்து கொண்டால், சட்டமன்ற தேர்தலின்போது தமக்கு உதவிகரமாகவும், விசுவாசமாகவும் இருப்பார்கள் என்று எடப்பாடியார் கணக்கு போடுகிறாராம்.
58-ம் கால்வாய் உடைப்புக்கு பன்றிகள் தான் காரணம்... அமைச்சர் உதயகுமார் கண்டுபிடிப்பு
நிதி ஒதுக்கீடு
அது மட்டுமில்லை.. மத்திய அரசிடமிருந்து தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதி மட்டுமே சுமார் 6,000 கோடிக்கு மேல் நிலுவையில் இருக்கும் என்கிறது ஒரு தகவல்... உள்ளாட்சி தேர்தலை நடத்தினால்தான் இந்த நிதியை தமிழகம் பக்கம் திருப்ப முடியும்.. உள்ளாட்சித் தேர்தலே நடத்தாவிட்டால், நிதியை ஒதுக்க மத்திய அரசு தயாராக இல்லை.
தேர்தல்
அதனால்தான் ஒவ்வொரு முறை அமைச்சர் வேலுமணி டெல்லி செல்லும்போதெல்லாம் இந்நிதியை ஒதுக்கும்படியான கோரிக்கையை வலுவாக எடுத்து வைத்துவிட்டு வருகிறார். ஒருவேளை மத்திய அரசு இந்நிதியை ஒதுக்கினால், அதை சீரிய முறையில் பயன்படுத்தி உள்ளாட்சி & சட்டமன்ற தேர்தலைகூட சிறப்பாக நடத்தி முடிக்கலாம் என்பதே எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான் என்கிறார்கள்.
அதிமுக
எனவே, கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள்கூட மறுக்கப்பட்டு வருகிறதாம்... பாஜக 30 சதவீதம், பாமக 25 சதவீதம், தேமுதிக 25 சதவீதம், தமாகா 20 சதவீதம் இடங்களை பிரித்து தர வேண்டும் என்று கேட்டதற்கு அதிமுக மறுத்து வருவதாக தெரிகிறது.
வார்டுகள்
செல்வாக்குள்ள மாவட்டங்கள், செல்வாக்கு இல்லாத மாவட்டங்கள் என இப்படி பிரித்து ஒதுக்குவது என்பது கூட்டணி ஃபார்முலாவுக்கு ஒத்துவராத ஒன்று.. அதனால் கலந்துதான் வார்டுகள் ஒதுக்கப்படும்.. திமுக வீழ்த்த வேண்டும் என்றால் இப்படி செய்தால் சரியாகும், அதற்கு ஒத்துழையுங்கள்.. என்று கூட்டணி கட்சிகளுக்கு சொல்லப்பட்டு வருகிறதாம். (எனினும் சதவீத அடிப்படையில்தான் தங்களுக்கு வார்டுகள் ஒதுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் கேட்டு கொண்டு வருவதாகவே தெரிகிறது)
மிரளும் திமுக
ஆனால், இந்த வியூகங்களை எல்லாம் பார்த்துதான் திமுக மிரண்டு கிடக்கிறதாம்.. இவ்வளவு தூரம் தேர்தலை நடத்த அதிமுக முயற்சி செய்கிறது என்றால் விஷயம் இல்லாமல் இருக்காது.. தேர்தலை குறித்து திடீர் என புது அறிவிப்பு எதுவானாலும் வரலாம்.. எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் என்றாலும் இன்னொரு பக்கம் சட்டரீதியான நடவடிக்கையையும் நாம் எடுக்க வேண்டும் என்று திமுக தலைமை தெளிவாக இருக்கிறதாம்.
சுப்ரீம் கோர்ட்
"உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வார்டு மறுவரையறை மற்றும் பட்டியல் பழங்குடிகள் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இவற்றை செய்து முடித்த பிறகே, உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு திரும்பவும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர, வேறு வழியில்லை" என்று ஸ்டாலின் அறிக்கையும் வெளியிட்டு விட்டார்.
பொங்கல் போனஸ்
பொதுவாக, உள்ளாட்சி தேர்தல் என்றாலே எம்ஜிஆர் காலத்தில் இருந்து திமுகவுக்குதான் அதிக மவுசு.. இப்போது, தமிழக அரசின் புது புது அறிவிப்பினால், திமுக வெற்றியை அவ்வளவு சீக்கிரம் அடைய முடியுமா என்பது சந்தேகமும் எழுந்துள்ளது. ஆளும் தரப்பு பொங்கல் போனஸ் + தேனி பார்முலாவை இறக்கி வெற்றிக்கு அடிகோலும் வழியை அதிமுக கையாளுவதையும் தடுத்துவிட முடியாது என்ற எதார்த்தத்தையும் திமுக புரிந்து கொண்டுள்ளது.
சந்தேகம்
மேலும் இப்போது தேர்தல் நடத்தினால், ஆளும்கட்சி என்ற அதிகாரத்தில் அதிமுக நிறைய இடங்களை கைப்பற்றும் என்பது கணிக்கப்படும் ஒரு விஷயம் என்பதால், இதனை சட்டரீதியாக தடுக்கும் முயற்சியில் திமுக இறங்கி உள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், அந்தந்த மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் நேர்காணல் நடத்தி ஏற்கனவே வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளனர். முக ஸ்டாலின் அனுமதி கிடைத்ததும், வேட்பாளர்கள் அறிவிக்கவும் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜரூர் ஏற்பாடு
மேலும், கூட்டணி கட்சிகளுக்கும் மாவட்டந்தோறும் சில குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க வேண்டி உள்ளது. அதனால், மாவட்ட செயலாளர்களின் கருத்தை கேட்டு, அவை முடிவு செய்யப்படும் என தெரிகிறது. கோர்ட் வரை திரும்பவும் திமுக செல்கிறது என்றாலும், கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள், தேர்தலுக்கான வியூங்கள், அதற்கான பேச்சுவார்த்தைகள் என ஜரூராக தயாராகியும் வருகின்றது.