தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த முடிவு? பரபரப்பு தகவல்
சென்னை: தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலைலயில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு வரும் ஜனவரி இறுதியில் அல்ல்து பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிராம பஞ்சாயத்து அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜனவரி 2-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
அதேநேரம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவிக்கவில்லை.இதனால் அங்கும் எப்போது தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அவசர சட்டம்
இது தொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்களில் வெளியான தகவலின் படி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் உள்ள தலைவர் பதவிக்கு இதுவரை நடந்து வந்த நேரடி தேர்தலை, மறைமுக தேர்தலாக மாற்றி சமீபத்தில் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து இருந்தது.
கால அவகாசம்
ஆனால் மறைமுக தேர்தலுக்கு தேவையான சட்ட விதிகளில் மாற்றம் செய்யவும், மறைமுக தேர்தலை நடத்துவதற்கான நடைமுறைகளை வகுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் தேவைப்படுகிறதாம். இதனால் தான் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லையாம்.
தேர்தல்
மறைமுக தேர்தலுக்கான நடைமுறைகளை மேற்கொள்ளும் பணியினை தேர்தல் ஆணையம் இன்னும் 3 வாரங்களுக்குள் முடித்து விடுமாம். அதன் பிறகு ஜனவரி மாத தொடக்கத்தில் நகர்ப்புற பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியிடப்பட உள்ளதாம்.
பிப்ரவரியில்
எனவே கிராம பகுதி தேர்தல் முழுமையாக முடிந்த உடன் தேர்தல் ஆணையம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாம்.