ஆச்சரியம்.. ஆனால் உண்மை.. ஒரே மேடையில் திமுக - பாமக கை கோர்ப்பு.. சென்னை அருகே பரபரப்பு
ஒரே மேடையில் திமுக, பாமகவினர் கை கோர்த்தனர்
சென்னை: சென்னை அருகே நடந்த கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும், திமுகவும் ஒன்றாக ஒரே மேடையில் கைகோர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.. அதன்படி, பூந்தமல்லி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர்களும் பதவி ஏற்றனர்.
பூந்தமல்லி ஒன்றியத்தில் மொத்தம் 28 கிராம ஊராட்சிகளும்,15 ஒன்றிய வார்டுகளும் உள்ளன.. இதில் 28 கிராம ஊராட்சிகளிலும் திமுகவின் அமோக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
திமுக
அதேபோல் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் 10 திமுகவும், 3 இடங்களில் அதிமுக மற்றும் 1 பாமக, 1 சுயேட்சை வெற்றி பெற்றனர். இதில் 10 இடங்களில் வெற்றி பெற்ற திமுக பூந்தமல்லி ஒன்றியத்தை கைப்பற்றி உள்ளது..
பூந்தமல்லி ஒன்றியம்
அதனால், வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் 10 பேரும் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். அதிமுகவிடம் இருந்த ஒன்றிய சேர்மன் பதவிகளை திமுக கைப்பற்றிய நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் மதியத்திற்கு மேல் பதவி ஏற்று கொள்ள முடிவு செய்தனர்.
கவுன்சிலர்கள்
மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக ஒன்றிய கவுன்சிலரும் அதிமுகவுடன் பதவி ஏற்று கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென திமுக கவுன்சிலர்களுடன் கை கோர்த்து பாமக கவுன்சிலர் பதவி ஏற்றுக்கொண்டார். அதிமுகவின் வெற்றி நிலை மாறியவுடன் பாமக உடனே திமுகவுடன் கை கோர்த்துள்ளது என்று சலசலக்கப்பட்டு வருகிறது.
அதிருப்தி
அதே சமயம், இது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றும், அல்லது தேர்தல் ஆணைய இணையதளத்தில் பாமக பெயர் இடம் பெறாத அதிருப்தியிலும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.. எப்படியாயினும் திமுகவுடன் பாமக கைகோர்த்த இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.