காலையில் திமுக.. மாலையில் அதிமுக.. நல்ல நேரம் போயிடக்கூடாதே.. பாமக கவுன்சிலர் திடீர் பல்டி!
பூந்தமல்லி பாமக ஒன்றிய கவுன்சிலர் விளக்கம் தந்துள்ளார்
சென்னை: "நானா.. திமுகவா.. இல்லவே இல்லை.. நல்ல நேரம் என்பதால்தான் திமுக கவுன்சிலர்களுடன் பதவி ஏற்று கொண்டேன்.. மற்றபடி நான் அதிமுகவுக்குதான் ஆதரவு" என்று பாமக ஒன்றிய கவுன்சிலர் திடீர் பல்டி அடித்துள்ளார்.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர். அதன்படி, பூந்தமல்லி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர்களும் பதவி ஏற்றனர்.
பூந்தமல்லி ஒன்றியத்தில் மொத்தம் 28 கிராம ஊராட்சிகளும்,15 ஒன்றிய வார்டுகளும் உள்ளன.. இதில் 28 கிராம ஊராட்சிகளிலும் திமுகவின் அமோக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் 10 திமுகவும், 3 இடங்களில் அதிமுக மற்றும் 1 பாமக, 1 சுயேட்சை வெற்றி பெற்றனர்.
கவுன்சிலர்கள்
இதில் 10 இடங்களில் வெற்றி பெற்ற திமுக பூந்தமல்லி ஒன்றியத்தை கைப்பற்றி உள்ளது.. அதனால், வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் 10 பேரும் நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். அதிமுகவிடம் இருந்த ஒன்றிய சேர்மன் பதவிகளை திமுக கைப்பற்றிய நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் மதியத்திற்கு மேல் பதவி ஏற்று கொள்ள முடிவு செய்தனர்.
பாமக கவுன்சிலர்
மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக ஒன்றிய கவுன்சிலரும் அதிமுகவுடன் பதவி ஏற்று கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென திமுக கவுன்சிலர்களுடன் கை கோர்த்து பாமக கவுன்சிலர் பத்மாவதி கண்ணனும் பதவி ஏற்றுக்கொண்டார். அத்துடன் அவர்களுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்து கொண்டார். அதிமுகவின் வெற்றி நிலை மாறியவுடன் பாமக உடனே திமுகவுடன் கை கோர்த்துள்ளது என்று சலசலக்கப்பட்டது.
விளக்கம்
அதே சமயம், இது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றும், சொல்லப்பட்டாலும் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திடீரென அதிமுக நிர்வாகிகளை கவுன்சிலர் பத்மாவதி கண்ணன் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சொன்னதாவது:
நல்ல நேரம்
"காலையில் நேரம் நன்றாக இருந்ததால் திமுக கவுன்சிலர்களுடன் பதவி ஏற்றுக் கொண்டேன்... அப்போது திமுக கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.. நான் எப்போதும் திமுகவுற்கு ஆதரவு இல்லை, எப்போதும் அதிமுகவிற்குதான் ஆதரவு தெரிவிக்கிறேன்" என்று திடீர் பல்டி அடித்தபடி விளக்கம் தெரிவித்துள்ளார். காலையில் திமுகவுடனும், மாலையில் அதிமுகவுடனும் இருந்த பாமக ஒன்றிய கவுன்சிலரால் பூந்தமல்லியில் திமுக, அதிமுக என 2 கட்சியினருமே சற்று குழம்பி போய் உள்ளனர்.