பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடியார் தரப்பு மும்முரம்.. கையை பிசையும் ஓபிஎஸ்!
எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்களை சந்தித்து பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
சென்னை: ஒற்றை தலைமை தேவை என்று ராஜன் செல்லப்பா சொன்னாலும் சொன்னார்.. யார் அந்த ஒற்றை தலைமை என்பதில்தான் போட்டியும், சிக்கலும் எழுந்து வருகிறது. இதில் ஹாட் நியூஸ் என்னவென்றால், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி முழு வேகம் காட்டி வருகிறார் என்பதுதான்.
ஒரு இடத்தை தவிர மற்ற இடங்களில் தோற்று போனாலும், கட்சிக்குள் எல்லாம் நல்லாதான் போய்ட்டு இருந்தது. அதே சமயம் ஆட்சி கவிழ்ப்பு, கவன ஈர்ப்பு என திமுக என்ன ஏடாகூடம் செய்யுமோ என்ற பீதியும் அதிமுகவை சூழ்ந்திருந்தது.
என்ன ஆச்சோ தெரியவில்லை.. திடீரென மதுரையில் இருந்து ராஜன் செல்லப்பா மூலம் வெடித்தது பிரச்சனை. ஓபிஎஸ் மகனை வேட்பாளராக அறிவிக்கும்போதுதான், இவரது மகனும் வேட்பாளராகத்தான் அறிவிக்கப்பட்டார். அப்போதெல்லாம் தெரியாத ஒற்றை தலைமையை திடீரென கிளப்பினார் ராஜன் செல்லப்பா.
மறைமுக வேலை
இவர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர் என்பதாலும், ஓபிஎஸ்-க்கு எதிராகத்தான் பேசுகிறார் என்பதும் புரிந்து கொள்ளப்பட்டது. அதனால் ஆளாளுக்கு எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் மறைமுகமாக இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
பலம் யாருக்கு?
யார் அந்த ஒற்றை தலைமை என்பது, இவர்கள் பக்கம் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தை வைத்துதான் தீர்மானம் ஆகும் போல தெரிகிறது. ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலரின் ஆதரவு இருந்தாலும், அதிகபட்ச பலத்தை தன்னுடன் வைத்திருக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். அதனால் எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்தித்து பேசியும் வருகிறார்.
ஆலோசனை கூட்டம்
எப்படி ஜெயலலிதா முதல்வர், பொதுச்செயலாளர் என இரண்டையுமே தன்னிடம் வைத்திருந்தாரோ, அதுபோலவே தனக்கும் ஒற்றை தலைமை மூலம் இவை கிடைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டமாம்- அதற்காகத்தான் நாளை நடக்க உள்ள அதிமுகவின் ஆலோசனை கூட்டத்தில் கட்சி தலைமை பதவியை கிடைக்க இப்போதே எம்எல்ஏக்களிடம் பேசி வருகிறாராம்.
பேச்சுவார்த்தை
அதுமட்டுமல்ல.. "கட்சி கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும், நீங்கள் எல்லாம் திமுக பக்கம் சென்றுவிட்டால், அங்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தர முடியும்? ஒன்றாக இணைந்து ஒற்றை தலைமைக்கு ஆதரவு தந்தாலே போதும்" என்று பேசிவருகிறாராம்.
பொதுச்செயலாளர்
பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு பிறகு யாருக்குமே செல்லவில்லை. இன்னும் அந்த பதவி அப்படியே தான் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் போன்ற பொறுப்புகள் உள்ள நிலையில், திடீரென இந்த ஒற்றை தலைமை பிரச்சனை கிளம்பி உள்ளது. இந்த பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமியே வகிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக எம்எல்ஏக்களை இங்கே எடப்பாடி சரிக்கட்டி வருகிறார் என்றால், 2 அமைச்சர்கள் டெல்லிக்கே சென்றுவிட்டார்களாம். அதனால் விவகாரம் படு வேகமாக சூடு பிடித்துள்ளதாகவே தெரிகிறது.
இறக்குமதியா?
எல்லாம்சரி.. கண்ணுக்கு எட்டிய தூரம் அதிமுகவில் ஒற்றைத் தலையே இல்லையே.. அப்படியானால் அந்த "தலை" வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படுவாரா என்பதுதான் தொண்டர்களின் குழப்பமாக உள்ளது!
பாஜக தரப்பு
ஒருவேளை எடப்பாடி கைப்பற்றும் நிலை உருவானால், தங்களுடைய ஓபிஎஸ் சும்மா இருக்க மாட்டார் என்றே தெரிகிறது. ஏற்கனவே டெல்லியில் நெருக்கம் கூடிவரும் நிலையில், தனது செல்வாக்கை நிரூபிக்க பாஜகவை முன்னிறுத்த கூடும் என்றே தெரிகிறது. அப்படி பாஜகவும் ஓபிஎஸ்-ன் வார்த்தைகளுக்கு கட்டுப்பாட்டால், அதிமுக தலைமை என்ன மாதிரியான நடவடிக்கை என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.