"கச்சேரி" இருக்கு.. ஸ்டாலின் வரை பறந்த புகார்கள்.. அனல் அடிக்கும் அறிவாலயம்.. நடுக்கத்தில் "தலைகள்"
திமுகவில் களையெடுப்பு விரைவில் நடக்கும் என்கிறார்கள்
சென்னை: ஒருசில திமுக மாவட்ட செயலாளர்கள் குறித்த புகார்கள் தலைமைக்கு வந்து கொண்டிருக்கிறதாம்.. இதையடுத்து, அடுத்த அதிரடியில் முதல்வர் முக ஸ்டாலின் இறங்குவார் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.
நடந்து முடிந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றுதான் பிரச்சாரம் செய்தார்.. ஆனால், களம் வேறுமாதியாக இருந்தது..
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103
எளிதில் வெற்றி என்பது கிட்டாமல், பல இடங்களில் போராடி வெற்றி பெற்றது.. இந்த வருத்தம் ஸ்டாலினுக்கு இன்னமும் உள்ளது.. கூடுதலாக, 20 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே ஸ்டாலினின் எண்ணம்.
தோல்வி
இதில் பெரும்பாலும் திமுகவை கைவிட்டது கொங்கு மண்டலம்தான்.. அதாவது கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏற்பட்ட திமுகவால் சறுக்கலை ஜீரணிக்கவே முடியவில்லை.. இத்தனைக்கும் இதே தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த தேர்தலில் திமுக நல்ல வாக்கு வங்கியை வைத்திருந்தது.
ரிப்போர்ட்
இந்நிலையில்தான், திமுக எங்கெல்லாம் தோல்வி அடைந்ததோ, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ரிப்போர்ட் கேட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. குறிப்பாக, அமைச்சர்கள் தொகுதியில் திமுக நிர்வாகிகள் எப்படி வேலை பார்த்தனர் என்ற விவரத்தையும் ஸ்டாலின் கேட்டுள்ளார்.. இதற்கான பணிகளும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடந்து வருகிறது..
சறுக்கல்
மேலும், மதுரை, சேலம், ஈரோடு, நாமக்கல், நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் திமுகவின் தேர்தல் பணி சறுக்கலாகிவிட்டது என்ற விஷயமும், இந்த மாவட்டங்களில் எல்லாம் அதிமுக எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டிருந்தது என்ற தகவலும் ஸ்டாலினுக்கு வந்து சேர்ந்துள்ளது.
யார்? யார்?
எனவே, திமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த நிர்வாகிகள் யார்? என்ற லிஸ்ட்டும் ஸ்டாலின் கேட்டுள்ளார்.. இப்போது விஷயம் என்னவென்றால், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் கிளம்பி உள்ளதாக தெரிகிறது.. இந்த புகார்களை தெரிவிப்பவர்கள், தோல்வியடைந்த திமுக வேட்பாளர்கள்தானாம்.. இதுபோல ஒவ்வொருவரும் தங்களது தொகுதிகளில் தாங்கள் தோற்றோம் என்பது குறித்து பல காரணங்களை லிஸ்ட் போட்டு தலைமைக்கும் தெரிவித்து வருகிறார்களாம்.
நிர்வாகிகள்
இது ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணி கட்சிகளிடம் திமுக நிர்வாகிகளுக்கும் ஆங்காங்கே அதிருப்தி தலைதூக்கி வருவதாக தெரிகிறது.. குறிப்பாக தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கும் திமுக மாவட்ட செயலாளருக்கும் கருத்து மோதல் வெடித்துள்ளது.. இந்த பஞ்சாயத்தும் ஸ்டாலின் வரை வந்துள்ளதாம்.
செயல்பாடு
அதாவது, வேட்பாளர்கள் தோல்வி ஏன்? நிர்வாகிகள் செயல்பாடு எப்படி இருந்தது? மாவட்ட செயலாளர்களின் களப்பணி எப்படி இருந்தது? அமைச்சர்கள் தொகுதியில் திமுக பெருந்தலைகள் எப்படி செயல்பட்டனர்? என்பன போன்ற விவரங்கள் அனைத்தும் தயாராகி கொண்டிருக்கிறது..
பீதி?
இந்த லிஸ்ட்கள் கிடைத்தபிறகு, ஒவ்வொரு மாவட்டத்திலும் களப்பணியை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுப்பார் என்று தெரிகிறது.. இவ்வளவு நாட்களும் கொரோனா பணியில் முழுமையாக ஈடுபட்டிருந்த ஸ்டாலின், இனி பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க உள்ளதால், பல திமுக புள்ளிகளுக்கு இப்போதே பீதி கிளம்பி விட்டதாம்..!