இதான் பாஜக.. 48 நாளாச்சு.. ஒரு அமைச்சரையும் போட முடியலை.. எம்எல்ஏக்கள் புலம்பல்.. திகைப்பில் புதுவை!
புதுச்சேரியில் இன்னும் ஆட்சி அமையாத சூழல் ஏற்பட்டு வருகிறது
சென்னை: தங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை என்று பாஜக தொடர்ந்து சொல்லி வந்தாலும், புதுச்சேரியின் அரசியல் நிலைமை தினம் தினம் பரிதாபமாக போய்க் கொண்டிருக்கிறது.. 48 நாட்களாகியும் இன்னும் அமைச்சரவை நிர்ணயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது..!
பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ரங்கசாமி முதல்வராகி விட்டார்.. ஆனால், அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவி இதுவரை ஏற்கவில்லை...
இதற்கு பிறகு என்ஆர் காங்கிரசுக்கும் - பாஜகவுக்கும் அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மோதல் வெடித்தது.. ஒருவரும் விட்டுக்கொடுக்கவில்லை.. அமைச்சரவையும் தயாராகவில்லை.. மக்களையும் கவனிக்கவில்லை.. தொற்றையும் குறைக்கவில்லை.
தமிழ்நாட்டை தொடர்ந்து... புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வு ரத்து... முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ரங்கசாமி
பதவிகளை கேட்டு பாஜக பிடிவாதம் பிடித்து கொண்டும், அதற்கு மறுத்து ரங்கசாமி முரண்டுபிடித்து கொண்டும் உள்ளனர்.. சில தினங்களுக்கு முன்பு, அமித்ஷாவே போனை போட்டு ரங்கசாமியிடம் பேசியதாக தகவல் வந்தது.. அதற்கு பிறகுதான் ஒருவழியாக சபாநாயகர், 2 அமைச்சர்கள் தருவதாக ரங்கசாமி ஒப்புக் கொண்டார்.. அதன்படி, செல்வமும் சபாநாயகர் ஆகிவிட்டார்.
நாராயணசாமி
ஆனால், அடுத்த பிரச்சனை வெடித்துள்ளது.. ஜான்குமார் தற்போது பிரச்சனையை துவக்கி உள்ளார்.. முந்தைய நாராயணசாமி அரசை கவிழ்த்த காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஜான்குமார் ரொம்பவே முக்கியமானவர்... சட்டசபை தேர்தலின் போது பாஜகவில் இணைந்தார்... புதுவையில் பாஜக எம்எல்ஏக்கள், 2 அமைச்சர் பதவிகளுக்காக முட்டி மோதினர். இதில் கட்சி தாவி வந்த ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று டெல்லி மேலிடம் அப்போது சொன்னதாம். ஆனால் திடீரென மறுத்துவிட்டதாம்.
ஜான்குமார்
இதுதான் ஜான்குமாருக்கு டென்ஷனை தந்துள்ளது.. அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து புதுவை பாஜக ஆபீசையே சூறையாடியுள்ளனர்.. இதை பற்றி ஜான்குமார் சொல்லும்போது, "அமைச்சர் உதவி உங்களுக்குதான்னு டெல்லியில சொன்னாங்க.. சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் எனக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் சொன்னாங்க.. இதை நம்பி நானும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நட்டா உள்ளிட்டவர்களுக்கு நன்றி சொல்லி பத்திரிகைகளில் கூட விளம்பரம் செய்திருந்தேன்.
பிரதமர்
இப்போ இப்போ திடீர்னு மறுக்கறாங்க.. அமைச்சர் லிஸ்டில் உங்க பேர் இல்லைன்னு சொல்றாங்க. 10 வருஷமாக பாஜகவில் இருக்கும் சாய் ஜெ.சரவணனுக்குத்தான் அமைச்சர் பதவியை தர போகிறார்களாம்.. 3 முறை வெற்றிபெற்று சட்டப்பேரவைக்கு சென்ற சீனியர் என்ற முறையில் எனக்கு அமைச்சர் பதவி ஏன் தரல.. அதான் பிரதமரை பார்த்து நேரிலேயே பேசலாம்னு டெல்லிக்கு வந்திருக்கேன்" என்று தெரிவித்தார்.
ஜான்குமார்
இந்த விவகாரம் இன்னும் முற்றுப் பெறவில்லை.. பாஜகவும் ஜான்குமாரை இன்னும் சமாதானப்படுத்தப்படவில்லை.. ரங்கசாமியும் வழக்கம்போல இதை கண்டு கொள்ளவில்லை.. ஆக மொத்தம் புதுச்சேரியில் அமைச்சரவையே அமைக்க முடியாத நிலைமைதான் மேலும் தொடர்கிறது.. இதற்கெல்லாம் என்ன காரணம்? வெறும் பதவி ஆசை மட்டுமே.
அதிருப்தியாளர்கள்
தாங்கள் இருக்கும் கட்சியிலேயே இருப்பதைவிட்டுவிட்டு, பதவி கிடைக்கும், பொறுப்பு கிடைக்கும் என்று நம்பி சில சீனியர்கள் எடுக்கும் விபரீத முடிவுகளே இதற்கு காரணம்.. பாஜகவை பொறுத்தவரை, பலவீனமானவர்கள் யார் யார், அதிருப்தியாளர்கள் யார் யார் என்பதை கண்டறிந்து, அவர்களை கொக்கி போட்டு தங்கள் பக்கம் இழுத்து, அதன்மூலம் தங்களின் பலத்தை பெருக்கி கொள்ளும்.. இதுதான் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடந்து வருகிறது.. அப்படித்தான் அந்தந்த மாநில ஆட்சிகளில் பங்கு போட்டும் வருகிறது.
ரங்கசாமி
புதுச்சேரியில்தான் முதல்முறையாக இப்படி ஒரு இழுபறி நடந்து கொண்டிருக்கிறது.. ரங்கசாமி பிடிவாதம் முன்பு, பாஜக நிஜமாகவே திணறி கொண்டிருக்கிறது.. பாஜக நம்பி சென்றவர்களும் செய்வதறியாது விழித்து கொண்டிருக்கிறார்கள்.. ஒருவேளை இதே ஜான்குமார், என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தால், ரங்கசாமி தனியாக தேர்தலைச் சந்தித்து குறைந்தபட்சம் 20 இடங்களிலாவது ஜெயித்திருப்பார்.. ஜான்குமாரும் இன்று ஜம்மென்று அமைச்சராகி இருப்பார்..
சீனியர்கள்
இப்போது பாஜக பக்கத் தாவியும் ஒரு பிரயோஜனமும் இல்லை.. இவ்வளவு நாள் சம்பாதித்து வைத்த கவுரவத்தையும் சீனியர்கள் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறார்கள்.. இதேசமயம், அமைச்சரவையே இல்லாமல் மாநிலத்தை ஆளுவது ரங்கசாமிக்கு மேலும் பலவீனத்தையே பெற்று தரும்.. பாஜக - ரங்கசாமி மோதலில் யார் விட்டுத்தருவார்கள் என்று தெரியவில்லை..
முருகன்
ஆனால், ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு எல்.முருகன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், புதுச்சேரியில் வீசும் அலை, தமிழகத்திலும் கூடிய சீக்கிரம் அடிக்கும் என்று சொல்லியிருந்தார்.. ஆனால் முருகன் சொன்ன அந்த அலை, ஷிப்ட் ஆகி புதுச்சேரி பாஜக ஆபீசுக்குள்ளேயே திருப்பி அடித்து கொண்டிருக்கிறது..!